இந்தியாவின் புதிய மருமகனான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!
By Aruvi | Galatta | August 21, 2019 19:41 PM IST
உலகின் பார்வையில் 'இந்தியா - பாகிஸ்தான்' என்ன தான் எதிர் எதிர் துருவங்களாகப் பார்க்கப்பட்டாலும், இரு நாடுகளிடையே போர் தீ பற்றி எரிந்தாலும், பாகிஸ்தானியர்கள் இந்திய மருமகன்காளக மகுடம் சூடும் வைபவங்கள் அவ்வப்போது இயல்பாக அரங்கேறுகிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சென்னையைச் சேர்ந்த மதிமலரை காதலித்து திருமணம் செய்து இந்தியாவின் மருமகனாத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான ஜாஹீர் அப்பாஸ், மோசின் கான் ஆகியோர்களும் இந்திய பெண்களை திருமணம் செய்து இந்தியாவின் மருமகன்களாக ஆனார்கள். கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் (ஆல் ரவுண்டர்) சோயாப் மாலிக், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சாவை திருமணம் செய்து இந்தியாவின் மருமகனாக தன்னை காட்டிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை தற்போது பெரிதாக பார்க்கப்படும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளரான ஹாசன் அலி, இந்திய பெண் ஷமியாவை திருமணம் செய்து இந்தியாவின் மருமகன் ஆனார்.
ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தின் மேவத் பகுதியைச் சேர்ந்த ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரான ஷமியா அர்ஜூ, ஜெட் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றியவர். தற்போது குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் அவர், கடந்த ஒரு ஆண்டுகளாமாக ஹாசன் அலியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹாசன் அலி - ஷமியா அர்ஜூ ஜோடியின் திருமணம் துபாயில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தற்போது, ஹாசன் அலி - ஷமியா திருமண புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
ஹசன் அலிக்கு 25 வயது என்றும், இந்திய பெண் ஷமியாவிற்கு 26 வயது என்றும், மாப்பிளையை விட, பெண்ணிற்கு ஒரு வயது அதிகம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
இத்திருமணத்திற்கு இந்திய வீரர்களுக்கு ஹாசன் அலி அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. அதேபோல், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் ஷதாப் கான் மட்டும் திருமண வைபவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.