தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று ஆகஸ்ட் 14 மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது. அதில், உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும், மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கருத்து பதிவிட்டு வந்தார்கள். தற்போது எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.சரண் கூறியிருப்பதாவது:

என் தந்தையின் உடல்நலம் குறித்து அக்கறை கொண்டு விசாரித்ததற்கு மிக்க நன்றி. அவர் ஐசியூவில் வென்டிலேஷனில் உள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். அவரது உடல்நிலை குறித்துத் தொடர்ந்து தகவல்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். மீண்டும் நன்றி என்று சரண் பதிவு செய்துள்ளார். 

இந்த லாக்டவுனில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை பாடி வெளியிட்டார். SPB விரைவில் குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ICU-வில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகைப்படம் ஒன்று நேற்று இரவு வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தன்னம்பிக்கையுடன் இருக்கும் எஸ்.பி.பி-யை பாராட்டி பதிவு செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.