ரயில் மோதி ரயில்வே தொழிலாளர்கள் 2 பேர் பலி!
By Arul Valan Arasu | Galatta | September 25, 2019 15:15 PM IST
ரயில் மோதி ரயில்வே தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் மீது உள்ள பாலத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில், 2 ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மும்பை - கன்னியாகுமரி ரயில் அந்த வழித்தடத்தில் வந்துள்ளது. ரயில் வருவதைக் கவனிக்காமல் பணியாற்றிக்கொண்டிருந்த 2 ரயில்வே ஊழியர்களும், ரயில் அருகில் வந்ததும் செய்வதறியாது தவித்துள்ளனர்.
அப்போது, அங்கிருந்து அவர்கள் தப்பிச் செல்வதற்குள், மின்னல் வேகத்தில் வந்த ரயில், அவர்கள் 2 பேர் மீதும் மோதியுள்ளது. இதில், அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயசந்த் மீனா என்பதும், மற்றொருவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மதுசூதனன் என்பதும் தெரியவந்தது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.