105 வயது பாட்டியைக் கொடூரமாகக் கொன்ற பேரன்
By Arul Valan Arasu | Galatta | September 25, 2019 14:49 PM IST
மது குடிக்கப் பணம் தர மறுத்ததால் 105 வயது பாட்டியைப் பேரன் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டியப்பனின் மகன் பாலமுருகன், எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன், மதுவிற்கும், கஞ்சாவிற்கு அடிமையாகி ஊதாரித் தனமாகத் திரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மது குடிப்பதற்காக பாலமுருகன் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுக்கவே, அவர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு, வீட்டிலிருந்த 105 வயது பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் பணம் தர மறுக்கவே, ஆத்திரத்தில் வீட்டிலிருந்த அரிவாள்மணையை எடுத்து, பாட்டியின் கழுத்தைக் கொடூரமான முறையில் வெட்டியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர், அங்கேயே சரிந்து உயிரிழந்தார். அப்போது, பாட்டி தனது காதில் அணிந்திருந்த தோட்டை, காதோடு சேர்த்து அறுத்துவிட்டு, அதனைக் கையில் வைத்துக்கொண்டு வெறிபிடித்தார்போல், அங்கேயே அமைதியாக அமர்ந்துள்ளார். இதனிடையே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே ஓடி வந்துள்ளனர்.
அப்போது, பாட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், பாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பாட்டியைக் கொடூரமாகக் கொன்ற பேரன் பாலமுருகனையும் கைது செய்தனர்.