இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த RRR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்க வெளிவந்த RRR திரைப்படம் உலகெங்கும் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

RRR திரைப்படத்தில் முன்னணி பாலிவுட் நடிகை ஆலியா பட், சீதா எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கதாநாயகியாக இருப்பினும் ஒரு சில முக்கிய காட்சிகளில் மட்டுமே ஆலியா பட் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் நடிகை ஆலியா பட்டும் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன.

மேலும் நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் RRR திரைப்படம் குறித்த பதிவுகளை நீக்கியது இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் இந்த செயல் RRR படக்குழுவிற்கும் அதிருப்தியை தந்துள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனையடுத்து இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஆலியா பட் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிலளித்துள்ளார்.

அதில், 

நான் எப்போதும் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் பழைய பதிவுகளையும் வீடியோக்களையும் வரிசைப்படுத்துவதற்காக சில பதிவுகளை நீக்குவது வழக்கம். அந்த வகையிலேயே RRR படத்தின் பதிவுகளை நீக்கினேன். மற்றபடி வேறு எந்த வருத்தமும் கிடையாது. RRR திரைப்படத்தின் ஓர் அங்கமாக பணியாற்றியதை பெருமையாகவே கருதுகிறேன். இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியோடு பணியாற்றியது சிறப்பான அனுபவமாக அமைந்தது. இயக்குனர் S.S.ராஜமௌலி மற்றும் அவரது குழுவினர் நான்கு ஆண்டுகளாக கடின உழைப்பால் உருவாக்கிய RRRதிரைப்படம் வெளியாகியிருக்கும் இந்த தருணத்தில் கிளம்பியுள்ள இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நான் இப்போது பதில் அளித்துள்ளேன். 

என ஆலியா பட் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஆலியா பட்டின் அந்த பதிவு இதோ…