தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது வலிமை திரைப்படம். இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படத்தில் அஜித் குமார் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த வலிமை படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வலிமை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆகியுள்ளது.

இருப்பினும் வலிமை திரைப்படத்தின் மீது நிறைய எதிர்மறை விமர்சனங்களும் கிளம்பின. ஒருபுறம் பலராலும் பாராட்டப்படும் வலிமை திரைப்படம் மறுபுறம் மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு அஜித் குமார் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் அஜித் குமார் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னதாக அஜித்குமாரின் 30 ஆண்டுகால திரைப்பயணம் குறித்து பதிவிட்ட பதிவை குறிப்பிட்டு, "சான்றோர்கள் அனைவருக்கும் இதை ஞாபகப்படுத்துகிறேன். எப்போதும் அளவற்ற அன்புடன்-அஜித் குமார்" என தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த பதிவு இதோ…