ஆவடி அருகே இரட்டை கொலை!

ஆவடி அருகே இரட்டை  கொலை! - Daily news

ஆவடி அருகே 2 வாலிபர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

crime

சென்னையை அடுத்த ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாலிபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களின் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்பிரின்ஸ் ஆரோன், சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர்கள் இருவரும், ஆவடி மசூதி தெருவைச் சேர்ந்த அரசு என்ற 30 வயது மதிக்கத்தக்க நபர் அவர் பெயர் அசாருதீன்  மற்றும் ஆவடி கவுரிபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் வயது 30,  என்பது தெரியவந்தது. அசாருதீன், ஆவடி மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். கொலையான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மேலும் நடத்திய விசாரணையில், ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் வயது 30, என்பவரும், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் வயது 30 என்பவரும் 2019-ம் ஆண்டு வெவ்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது நண்பர்களானார்கள். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்தது.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து ஆவடி பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தனர். இதனால் ஜெகன், அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது மணிகண்டனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு மணிகண்டனின் மனைவியை ஜெகன் தன்னுடன் அழைத்துச்சென்று விட்டதாகவும், அதன்பிறகு மணிகண்டன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த முன்விரோதம் காரணமாக மணிகண்டன், ஜெகன் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஜெகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜெகன் தனது நண்பர்களான அசாருதீன், சுந்தர் உள்பட மேலும் சிலருடன் சேர்ந்து ஆவடி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் மது அருந்தினார். இதையறிந்த மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 10 பேர் ஜெகனை தீர்த்து கட்டுவதற்காக அங்கு சென்றனர்.

மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை பார்த்ததும் ஜெகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஜெகனின் நண்பர்களான அசாருதீன், சுந்தர் இருவரையும் மணிகண்டனின் கூட்டாளிகள் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் இருவரது கை, கால், முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியதுடன், முகத்தையும் சிதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

இதையடுத்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் இந்த கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டன் உள்ளிட்டவர்களை கைது செய்த பின்னர் தான் இந்த இரட்டைக்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலையான அசாருதீனுக்கு கவுரி என்ற மனைவி உள்ளார். தற்போது அவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சுந்தருக்கு, பிரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment