தேர்தலில் தனித்து நிற்க தேமுதிகவுக்கு அச்சமில்லை; தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை காளவாசல் தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் விஜயகாந்த் இளைய மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த  விஜய பிரபாகரன், தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு கொரோனா தொற்று சரியாகிவிட்டது. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாக உள்ளார். அவரை குணப்படுத்திய மருத்துவர், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். செயற்குழு பொதுக்குழுவைக் கூட்டி பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம். தேமுதிக ஆரம்ப காலத்தில் தனித்தே களம் இறங்கியது. கேப்டனும், பிரேமலாதவும் கட்சி த்தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்கள்.தேமுதிக தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்துள்ளோம். தேர்தலில் காலத்திற்கு ஏற்ப வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும்.

திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக மட்டுமே. அதை நிரூபித்தும் காட்டியுள்ளோம். தேமுதிக தவிர்த்து மூன்றாவது அணி என எந்தக்கட்சியும் சொல்ல முடியாது. தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். அந்த நம்பிக்கை உள்ளது. மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் பெரியவர், சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா தொகுதிகளிலும் தந்தை பிரச்சாரம் செய்வார். மக்களைப் பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

கலைஞர், ஜெயலலிதா இல்லாத இச்சமயத்தில் தனித்த தனித்துவமான தலைவர் இல்லை. அரசுப்பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நான் தனிப்பட்ட முறையில் கருத்துச்சொல்ல முடியாது. விஜயகாந்த் மகனாக நான் கருத்து சொன்னால் கட்சிக்குள் குழப்பமாகி விடும். எனவே, கட்சி சார்பில் அறிக்கை வெளியாகும். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் வாழ்த்து மட்டுமே சொல்ல முடியும். களத்தில் சந்திப்போம்' என்று அவர் தெரிவித்தார்.