தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் பொன். ராம் - சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர் மகன் என்ற புதிய திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. 

கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி நடைபெற்று வந்தது. 

எம்.ஜி.ஆர் மகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக களமிறங்கிறார் மிருணாளினி ரவி. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குனர் பொன்.ராம். 

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக தடைபட்டுள்ள திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தணிக்கை குழு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் ராஜவம்சம். இதில் நாயகியாக நிக்கி கல்ரானி நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமாருடன் விஜயகுமார், தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், சிங்கம்புலி, ரேகா ஆகியோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.