கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அறிவித்தார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் அந்த தகவலை உறுதி செய்தார். எஸ்.பி.பி-ன் மறைவு குறித்து பல திரைப்பிரபலங்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிரபல பாடகர் எஸ்.பி.பி பாடுவது ஒரு வழக்கமானதாகவும் அப்படத்தின் வெற்றியையும் கூட்டியது எனலாம். ரஜினிகாந்தின் படங்களில் ஒலிக்கும் அறிமுக பாடலை எஸ்பிபி பாடினால் அது கட்டாயம் ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை அப்போது அதிகம் இருந்தது. அதனாலேயே, ரஜினியின் அறிமுகப் பாடலை பாடியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது எஸ்.பி.பியே. மேலும் அந்த சமயங்களில் ரஜினி படங்கள் என்றாலே கட்டாயம் அதில் எஸ்.பி.பி இடம்பெறுவார் என்றும் கூறுவார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், கடைசி நிமிடம் வரை உயிருக்காக போராடி எஸ்பிபி மறைந்துள்ளார். அவரின் மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.எஸ்.பி.பி-யின் பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இல்லை. எஸ்பிபி-யின் பாடலையும் குரலையும் விட அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். 

இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப்பெரிய பாடல்களை உருவாக்கியுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.எஸ்பிபி-யின் கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று உருக்கமாக வீடியோவில் பேசியுள்ளார். 

பாடகர் எஸ்.பி.பி-ன் மறைவு செய்தி பட்டி தொட்டியெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 74 வயதாகும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜூன் 4, 1946ல் பிறந்தார். 1966ம் ஆண்டு சினிமாவுக்காக பாடும் பயணத்தை துவங்கினார் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், பெங்காளி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். இதுவரை 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு அவர் ராசியான பாடகராகவும் இருந்திருக்கிறார். தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகம் என்றே கூறலாம். 

இந்நிலையில், அவரது உடல் இன்று மாலை 4 மணிக்கு சென்னை காம்தார் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கு 6 மணிவரை அவர் உடல் வைக்கப்படும். பின்னர் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அடக்கம் செய்யப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகின்றன என்று செய்திகள் வெளியாகி வருகிறது.