உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்தும் வகையில், ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டது. 

இது குறித்து அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், “உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷியா பதிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உலகை அதிர வைத்தார். ஆனால் தடுப்பூசி உருவாக்கத்தில் பல்லாயிரகணக்கானோருக்கு செலுத்தி சோதிக்கும் மூன்றாவது கட்ட பரிசோதனை குறித்த விவரங்களை அந்த நாடு வெளியிடாதது, உலக நாடுகளை சந்தேகப்பார்வை பார்க்க வைத்தது. தடுப்பூசி விஷயத்தில் ரஷ்யா அவசரப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும் அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ, கொரோனா தடுப்பூசி உற்பத்தி அடுத்த 2 வாரங்களில் தொடங்கும் என கூறி மேலும் பரபரக்க வைத்தார். அது மட்டுமல்லாமல், இந்த தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்கள் ஆதாரமற்றவை எனவும் அவர் நிராகரித்தார்.
 
முன்னுக்குப் பின்னாக, பல தகவல்கள் ரஷ்ய தடுப்பூசி குறித்து வெளிவந்துக் கொண்டிருந்தன. இருப்பினும், நாளுக்கு நாள் உலகில் தீவிரமடைந்து வரும்ம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. 

இந்நிலையில் ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். தனது இரண்டாவது கொரோனா தடுப்பூசிக்கு, ‛Epivacorona' என பெயரிடப்பட்டுள்ளது. இது, அதிகாரபூர்வமாக ரஷ்யாவின் இரண்டாவது தடுப்பூசியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தடுப்பூசி பதிவை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்கப்போவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியது. ரஷ்யாவின் சுகாதார அமைப்பு இப்போது கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளது என ரஷ்ய உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் புதின் கூறினார். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மனித உயிர்களின் மதிப்பினை உணர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையும், கொரோனா முன்கள பணியாளர்களும் தங்களின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்போது நம் நாடு கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளது என தெரிவித்தார்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தடுப்பூசி பலனளிக்கவில்லை என்பதால்தான், இந்த அடுத்த தடுப்பூசியின் அறிவிப்பா என்றும் ; இந்த தடுப்பூசியாவது முழுமையான பலனை தருமா என்றும் அறிவியலாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முந்தைய தடுப்பூசியை போலவே, ரஷ்யா இந்த தடுப்பூசிக்கும் உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்புதல் வாங்காமல்தான் இருக்கிறதென சொல்லப்படுகிறது.

ரஷ்யா மட்டுமன்றி, உலகம் முழுவதும் பல நாடுகள் தடுப்பூசிக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதில், அமெரிக்கா மிகமுக்கியமான இடத்தில்  இருக்கிறது. அமெரிக்காவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், ட்ரம்ப் தடுப்பூசிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 71.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2.07 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன. அமெரிக்காவில் தற்போது பிசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் இறுதிச் சோதனையில் உள்ளன.

இந்த சோதனை வெற்றி அடைந்த உடன் சட்ட அனுமதி விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அனுமதிக்கு பிறகு அமெரிக்காவில் நவம்பர் மாதத்தில் 5 கோடி டோஸ் மற்றும் டிசம்பர் இறுதிக்குள் 10 கோடி மற்றும் ஏப்ரல் மாதத்துக்குள் 70 கோடி டோஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மைய தலைவர் ராபர்ட் ரெட்பீல்ட் கூறுகையில், ‛மார்ச் மாத இறுதிக்குள் 7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும். இது 35 கோடி மக்களுக்கு போதுமானதாக இருக்கும். எனவே கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி வரும் ஜூன் வரை தொடரும். ஜூலை மாதத்துக்குள் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிவடைந்து விடும்,' என்றார்