நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

புரட்சி தளபதி விஷால் மற்றும் அவரது தந்தை கொரோனா பிடியில் சிக்கினர். பின் ஆயுர்வேத மருந்துகள் உட்கொண்டு, கொரோனாவிலிருந்து மீண்டனர். நடிகர் கருணாஸ் சில நாட்களுக்கு முன்பு பூரணமாக குணடமடைந்து வீடு திரும்பினார். 

இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.பி.பி-யின் உடல் நிலை குறித்து தினமும் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார் அவரது மகன் எஸ்.பி.சரண். 

இந்நிலையில் நடிகை தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது பெற்றோர் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்திக்குமாறு தமன்னா வேண்டுகோள் விடுத்து பதிவு ஒன்றை செய்துள்ளார். கடந்த வார இறுதியில் அறிகுறிகள் காணப்பட்டதால், உடனே வீட்டில் உள்ள அனைவரும் டெஸ்ட் எடுத்துக்கொண்டார்களாம். டெஸ்டில் தனது தாய் தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என பதிவில் குறிப்பிட்டுள்ளார் தமன்னா. தமன்னாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.