“டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் போது, கடைசி நேரத்தில் வேறு ஜெர்சியை ஏன் மாற்ற வைத்தீர்கள்? என்றும், நடுவரின் ஒரு தலைபட்சமான முடிவிற்கு நிச்சயம் நீதி கேட்பேன்” என்றும், இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இந்திய மகளிர் குத்துச்சண்டையின் நம்பிக்கை நட்சத்திரமான திகழ்ந்த மேரிகோம், ஒலிம்பிக் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் களம் இறங்கினார்.

அப்போது, கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் லோரெனாவை எதிர்கொண்டார் மேரிகோம், முதல் சுற்றில் 4-1 என்ற கணக்கில் பின் தாங்கிய மேரிகோம், அடுத்த இரு சுற்றுகளையும் 3-2, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அதாவது, 3ல் இரண்டு சுற்றுகளை கை பற்றியதால், நிச்சயம் வெற்றி பெற்றோம் என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்த மேரிகோமிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

அதற்கு காரணம், 3 சுற்றுகளிலும் 5 நடுவர்கள் வழங்கிய புள்ளிகளின் படி, மேரிகோம் 142 புள்ளிகளும், இன்க்ரீட் 143 புள்ளிகளும் பெற்றார் என்று, அறிவிக்கப்பட்டது. 

இதனால், இன்கிரிட் 3-2 என்ற கணக்கில் மோரிகோமை விட அதிக புள்ளிகள் பெற்று, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்த மேரிகோம், இந்திய இந்தியக் குத்துச்சண்டை பயிற்சியாளர்களிடம் இது குறித்து முறையிட்டதாக கூறப்படகிறது.

ஆனாலும், இது தொடர்பாக எந்த சரியான பதிலும் கிடைக்காத நிலையில், இது குறித்து தற்போது மௌம் கலைத்துள்ள இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், “போட்டியில் நடுவர்களின் நியாயமற்ற முடிவால் தனக்குத் தோல்வி கிடைத்து விட்டதாக” பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், “இது போன்ற மிகப் பெரிய போட்டிகளில் நடுவர்களின் முடிவு வெளிப்படைத் தன்மையுடன் நியாயமாக இருக்க வேண்டும் என்றும், இதனை நான் பல முறை கூறியுள்ளேன்” என்றும், மேரிகோம் கூறியுள்ளார்.

“நடுவர்களின் மோசமான முடிவால் நான் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி உள்ளேன். இதை என்னால் நம்ப முடியவில்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் நாக் அவுட் சுற்றில், தனது ஜெர்சியை ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் கடைசி நேரத்தில் மாற்ற சொன்னது ஏன்? என்றும், இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கேள்வி எழுப்பி உள்ளார்.

“இதற்கான காரணத்தை ஒலிம்பிக் கமிட்டியினர் உடனடியாக விளக்க வேண்டும்” என்றும், மேரிகோம் வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், “தற்போதைய சூழலில், நான் உணர்ச்சிப்பூர்வமான மன நிலையில் உள்ளதால், இதற்கு நீதி கேட்கும் நடவடிக்கை ஒத்திவைப்பதாகவும்” மேரிகோம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “ஒலிம்பிக் தூதுவர் பொறுப்பை தற்போது நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும்” மேரிகோம் கூறியுள்ளார். 

இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் இந்த குற்றச்சாட்டு, உலகம் முழுவதும் வைரலான நிலையில், இது தொடர்பாக டிவீட் செய்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “நம்மை பொறுத்தவரை மேரிகோமே வெற்றியாளர், நடுவர்களின் புள்ளிகள் கணக்கிடும் முறை வருத்தம் அளிக்கிறது” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.