போலீஸ் வேலை கிடைத்ததை காரணம் காட்டி காதலியை, காதலன் கழற்றிவிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான காதலி தற்கொலை செய்துகொண்டார். கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு சோக சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான நந்தினி, அதே கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக அடிக்கடி ஊர் சுற்றி வந்தனர். இதன் காரணமாக, அவர்களது தீவிரமான காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரிய வந்தது. முதலில் கோபப்பட்ட இரு வீட்டார் பெற்றோரும், முழுமையாக விசாரித்து விட்டு, இருவரது வீட்டாரும் அவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளனர். இதனால், அவர்கள் இன்னும் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தனர். 

மேலும், அவர்கள் காதல் ஜோடியாக மிகவும் நெருக்கமான நிலையில், மிகவும் மகிழ்ச்சியாக அந்த பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சுற்றித்திரிந்து வந்துள்ளனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலன் யோகேசுக்கு போலீஸ் வேலை கிடைத்து உள்ளது. இதனால், அவர் தற்போது அந்த பகுதியில் காவலராக பணியாற்றி வருகிறார்.

மேலும், போலீஸ் வேலை கிடைத்ததில் இருந்து காதலி நந்தினியிடம் பேசுவதையே காதலன் யோகேஷ் முற்றிலும் தவிர்த்து வந்து உள்ளார். 

ஆனால், காதலி நந்தினி தொடர்ச்சியாக காதலனிடம் பேச முயன்று வந்துள்ளார். ஆனால், காதலன் பேசுவதை கூட முற்றிலுமாக தவிர்த்து வந்தது நந்தினிக்கு எப்படியோ தெரிய வந்தது. இதனால், மனமுடைந்து அந்த பெண் காணப்பட்டார். 

இந்த நிலையில் காதலன் யோகேசை சந்தித்த நந்தினி, “என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்?” என்று விளக்கம் கேட்டு உள்ளார். அத்துடன், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.

அனால், நந்தினியைத் திருமணம் செய்ய காதலன் யோகேஷ் மறுத்துவிட்டார். மேலும், இது தொடர்பாக பதில் அளித்த காதலன் யோகேஸ், “எனக்கு போலீஸ் வேலை கிடைத்திருப்பதால், எனக்கு தகுந்தார் போல் உரிய வரதட்சணையை உன்னாலும், உன் பெற்றோராலும் கொடுக்க முடியாது என்று கூறியதுடன், உன்னைத் திருமணம் செய்ய முடியாது” என்று, காதலி நந்தினியிடம் நேரடியாக காதலன் யோகேஷ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், வாழ்க்கையில் வெறுத்துப்போன போல் காணப்பட்ட அந்த நந்தினி, கடந்த சில நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இப்படி அதிக மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அங்குள்ள எலந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், “போலீஸ் வேலை கிடைத்து விட்டதை காரணம் காட்டி காதலன் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதால், இளம் பெண் நந்தினி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது” தெரிய வந்தது. 

அத்துடன், இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.