அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி இரவு 8 மணியளவில்  ஜார்ஜ் ஃப்ளாய்ட் சிகரெட் பாக்கெட் வாங்கச் சென்றுள்ளார். கடையில் அவர் கொடுத்த 20 டாலர் பணத்தைக் கள்ளநோட்டாக அங்கு வேலை செய்த வந்தவர்கள் கருதியுள்ளனர். இதனால், காவலர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். கடைக்கு வெளியே ஜார்ஜ் தன்னுடைய காரில் அமர்ந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், கடைக்காரர்கள் கூறிய அடையாளங்களின்படி  ஜார்ஜை அடையாளம் கண்டுள்ளனர்.

காரில் இருந்து இறங்கும்படி காவலர்கள் அவரிடம் கூறியதாகவும் அதற்கு ஜார்ஜ் மறுத்ததாகவும் காவலர்கள் தெரிவிக்கின்றனர். பின்னர், அவரை இழுத்து காரின் டயர் அருகில் படுக்க வைத்து காவலர்களில் ஒருவரான டெரெக் சவுவின் தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்தியுள்ளார். அப்போது, தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் பலமுறை கூறியும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார், டெரெக் சவுவின்.

தாமஸ் லேன், டோ தாவோ மற்றும் அலெக்சாண்டர் குயெங் ஆகிய மூன்று காவலர்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகில் நின்றுள்ளனர். சிறிது நேரத்தில் ஜார்ஜ் பேச்சுமூச்சின்றிக் கிடந்துள்ளார். ஆம்புலன்ஸ் வரும் வரையிலும் டெரெக், அவருடைய கழுத்துப் பகுதியிலிருந்து தனது காலை எடுக்கவில்லை என்கின்றனர். மருத்துவமனைக்கு ஜார்ஜைக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை வீடியோவாக 17 வயதுப் பெண் டேர்னெல்லா ஃப்ரேசியர் பதிவு செய்துள்ளார். வெள்ளை இனத்தைச் சேர்ந்த காவலர்களின் நிறவெறியே இத்தகைய கொடுஞ்செயலுக்குக் காரணம் எனக் கூறி பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஜார்ஜ் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே, இனவெறியால் கொல்லப்பட்டார் என, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ''எனக்கோ அல்லது என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கோ காவலர்களைப் பணிநீக்கம் செய்த நீதி போதுமானதாக இல்லை. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்றே நாங்கள் நினைக்கிறோம். அவர்கள் என்னுடைய சகோதரரைக் கொலை செய்துள்ளனர்” என்று ஜார்ஜ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

``மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், கறுப்பின மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதைப் பார்த்து அவர்கள் சோர்வடைகிறார்கள். மக்களை இப்போது தடுக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் வலியுடன் போராடுகிறார்கள். நான் உணரும் அதே வலியை அவர்களும் கொண்டிருக்கின்றனர். அவர்களை அமைதியாக இருக்க வைக்க என்னால் முடியாது. எங்களுக்கு நீதி வேண்டும்” என்று ஜார்ஜின் சகோதரர் கூறியுள்ளார்.


ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் உள்ள கறுப்பின மக்கள் நியூயார்க், அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டங்களை இரவுபகலாக நடத்தி வருகின்றனர். ``நாங்கள் சுவாசிக்க கஷ்டப்படுகிறோம், எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள், எங்களுக்கு நீதி வேண்டும்” உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்தியபடி மக்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் வன்முறைகளும் அதிக அளவில் நடந்துள்ளன. அட்லாண்டா பகுதியில் காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது பாட்டில்களை எறிந்ததாகவும் கூறப்படுகிறது.  ``நோ ஜஸ்டிஸ், நோ பீஸ்” என்று முழங்கியபடி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் வன்முறையில் ஈடுபடும் மக்களைக் கண்டதும் சுட ட்ரம்ப் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் வன்முறையைத் தூண்டுவதாகவும் ட்விட்டர் நெறிமுறைகளை மீறுவதாகவும் கூறி ட்விட்டர் நிறுவனம் இந்த ட்வீட்டுகளை நீக்கியது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் அதிபர் ட்ரம்புக்கும் இடையில் மோதல் சென்றுகொண்டிருக்கிறது. 

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மீது முழங்கால்களை வைத்து அவரைக் கொன்ற காவல் அதிகாரியின் மீது கொலை வழக்குக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய மனைவி கெல்லி சவுலின், டெரெகிடமிருந்து விவாகரத்துப் பெற நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலம்காலமாக பல தலைவர்கள் கறுப்பின மக்களுக்காகவும் நிறவெறிக்கு எதிராகவும் போராடிவரும் நிலையில் அம்மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு அம்மக்களுக்கான வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து கேள்விகளையும் எழுப்புகின்றன.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க இராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ''மெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலை இதுதான். கறுப்பாக இருப்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாங்கள் தற்போது நவீன கால கொலைகளை எதிர்கொள்கிறோம். அனைவரையும் சமமாக நடத்துவதற்காக வழியை காணாத வரை அமெரிக்கா எப்போதும் உயர்ந்த நாடாக மாறாது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் ஆத்மா சாந்தி அடையட்டும்'' என இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
பல ஆண்டுகளாக கருப்பரினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குரல் ஓங்கத் தொடங்கி அமெரிக்காவின் தேசிய விவகாரமாக இது பூதாகாரம் எடுத்துள்ளது.