தாராபுரம் பகுதியில் காதல் திருமணம் செய்துகொண்ட  புதுப்பெண், திருமணம் ஆன 5 வது நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மாருதி நகரை சேர்ந்த ராஜ் என்பவரின் மகள் 20 வயதான தேவி, உடுமலை அடுத்துள்ள அமராவதி பகுதியைச் சேர்ந்த 29 வயதான செல்வராஜ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். செல்வராஜ் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில், இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர்.

இருவரும் ஒரே சமூகம் மற்றும் உறவினர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், கிரின் சிக்னல் காட்டி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இரு வீட்டர் சம்மதத்துடன், கடந்த 8 ஆம் தேதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், கணியூரில் உள்ள நாமகிரி அம்மன் கோயிலில் காதலர்களான செல்வராஜ் - தேவி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவி தனது காதல் கணவருடன், தாராபுரம் மாருதி நகரில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு விருந்துக்காக வந்திருக்கிறார். 

இந்நிலையில், நேற்று பிற்பகலில் செல்வராஜ் - தேவி இருவரும் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு உள்ளனர். அதன் பிறகு, வீட்டுக்கு வெளியே புது மாப்பிள்ளை செல்வராஜ் உறவினர்களுடன் பேசி கொண்டு இருந்துள்ளார். 

அப்போது, வீட்டுக்குள் சென்ற தேவி தன் ரூம் கதவைச் சாத்திக் கொண்டார். வெகு நேரமாகியும் தேவி, தன் ரூம் கதவைத் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால், சந்தேகம் அடைந்த தேவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், தேவியை அழைத்து கதவைத் திறக்கும் படி கூறி உள்ளனர். ஆனால், கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்து அவர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு, அந்த ரூமில் உள்ள விட்டத்தில் தேவி, சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த கணவன் செல்வராஜ், மற்றும் தேவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். இதனை அடுத்து, உடனடியாக தேவியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, தேவியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகக் கூறி உள்ளனர். 

இதனால், தன் காதல் மனைவி இறந்ததை அறிந்த அவரது காதல் கணவர் செல்வராஜ், தேவியின் உடல் மீது விழுந்து கதறி அழுதார். இதனைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தாராபுரம் போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேவியின் தற்கொலை குறித்த, கணவர் செல்வராஜ் மற்றும் தேவியின் பெற்றோர்களிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதால், தாராபுரம் சப் கலெக்டரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். 

இதனிடையே, திருமணமான 5 வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தாராபுரம் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.