கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் தொடங்குவதற்காக இதில், கடந்த ஜூலை முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் பெரும்பாலான மாநிலங்களில் திறக்கப்படவில்லை. ஒரு சில மாநிலங்களில் நவம்பர் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என கருத்துக்கள் எதிரொலியால், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது,

இதுதொடர்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாகவும், கொரோனா பரவல், பருவமழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் இன்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அரசு தரப்பிலிருந்து திறப்பு தள்ளி வைப்பு குறித்து அதிகாரபூர்வமாக தகவல் வெளிவரவில்லை.

தமிழக அரசின் நவம்பர் 16 பள்ளிகள் திறப்பு உத்தரவும், இப்போது வரை அமலில் அப்படியே இருக்கிறது. இந்த உத்தரவுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் இன்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ` `9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும்’ என்றும், `அனைத்துக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நவம்பர் 16 முதல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும்’ என்றும் முதலமைச்சர் பழனிசாமி அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவ, மாணவியரின் பாதுகாப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இது தெரியவில்லை.

அறிவிப்பைக் கண்டதிலிருந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது, விடுதி மாணவர்களுக்கான தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பை எந்த வகையில் மேற்கொள்வது என்பது குறித்த அச்சத்திலும், பதற்றத்திலும் தவிப்பதைக் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக, `கொரோனாவின் இரண்டாவது அலை வீசும்’ என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்து, இது போன்ற தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் உள்ளாகி அடுத்தடுத்து ஊரடங்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் நவம்பர் மாதம் 16-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி எல்லா தரப்பிலும் எழுந்திருப்பதை முதலமைச்சர் பழனிசாமி உணராமலிருப்பது கண்டனத்துக்குரியது.

மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவருமே, `நவம்பருக்கு பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வு செய்து, பள்ளிகளைத் திறக்கலாம்’ என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அந்தச் செய்திகள் வெளிவருகின்றன. உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் ஆய்வறிக்கைகளும் எச்சரிக்கின்றன. இவற்றையெல்லாம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல், ஒதுக்கித் தள்ளிட இயலவில்லை.

ஆகவே, மாணவச் செல்வங்களின் உயிர்ப் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முதலமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஏதேதோ உள் நோக்கத்துடன், அவசரகதியில் முடிவெடுக்காமல், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, பெற்றோர்கள்- ஆசிரியர் சங்கங்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்திட வேண்டும் என்றும், நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை நிறுத்திவைத்து, மாற்று அறிவிப்பை வெளியிட்டு, மக்கள் மத்தியில் மிகப் பரவலாக ஏற்பட்டிருக்கும் மனப் பதற்றத்தை நீக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" 

என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.