“சிவசங்கர் பாபா, மாணவிகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று, சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசார் தன்னை கைது செய்துவிடக் கூடும் என்று, சிவசங்கர் பாபா தலைமறைவானதாகத் தகவல்கள் வெளியானது.

இதனால், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை டெல்லியில் பதுங்கியிருந்த போது, அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். 

அத்துடன், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அதிரடியாகக் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபா மீதான இந்த பாலியல் வழக்கில், முன்னாள் மாணவிகள் கிட்டதட்ட 18 பேர் தனித்தனியாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் போலீசார் கூறினார். பின்னர், சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வந்தனர். 

அத்துடன், சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்த நிலையில், அந்த ஜாமீன் மனுவில், “செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை” என்று, சிவசங்கர் பாபா அந்தர் பல்டி அடித்திருந்தார்.

மிக முக்கியமாக, “ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்குத் தான் சென்று வந்ததாகவும்” சிவசங்கர் பாபா, அந்த ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

“ஆன்மிக பயணத்திற்காக டெல்லி சென்ற நிலையில் காவல் துறையினர் கைது செய்து உள்ளதாகவும்” சிவசங்கர் பாபா தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவும் அதிரடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. 

சமீபத்தில் இந்த வழக்கில் 300 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிகையைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இதில் 40 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இந்த வழக்கில் இது வரை சிவசங்கர் பாபா, ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், “கடந்த 2011, 2012 2013 ஆம் ஆண்டுகளில் படித்த சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகளை, சிவசங்கர் பாபா வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தது” சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஏற்கனவே சிவசங்கர் பாபாவுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிக்கை தயாராகி விட்டதாகவும், இன்னும் சில நாட்களில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இவர் மீதான அடுத்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.