சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்து, பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்த புகாரில் பள்ளி ஆசிரியைகள் 5 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவான சிவசங்கர் பாபாவை தேடி வந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். 

அதன் பிறகு, அவரை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அத்துடன், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பெண் பக்தருமான பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அத்துடன், இந்த வழக்கில் அடுத்த திருப்பமாக, “கடந்த 2010-12 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல் துறையினர், போக்சா சட்டம் மற்றும் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் எங்களையும் சேர்த்துள்ளதாகவும்” சிபிசிஐடி காவல் துறையினர் மீது புகார் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாக புகாருக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களைக் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில், இது வரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த நிலையில், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.

இதனால், சிவசங்கர் பாபா பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்து உள்ளது. 

அதன் படி, வரும் 19 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதில், முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்குச் சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டு இருக்கிறது. 

முக்கியமாக, “பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் தான், சிவசங்கர் பாபாவிடம் எங்களை அழைத்துச் சென்றதாக” புகார் அளித்துள்ள மாணவிகள் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

அதாவது, சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்து, பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்த புகாரில் சிக்கி உள்ள ஆசிரியைகள் யார் என்பதை கண்டுபிடிக்கவே, இந்த விசாரணை நடத்தப்பட கிறது. இந்த விசாரணையில், முதல் கட்டமாக 5 ஆசிரியர்களுக்கு பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்திருக்கிறது.

அத்துடன், பள்ளி மாணவிகளை தவறாக வழி நடத்திச் சென்ற அந்த ஆசிரியரை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், சிபிசிஐடி தற்போது தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.