தனிமையில் தவித்து வந்த 70 வயது ஆணை திருமணம் செய்துகொள்ள முன் வந்த 49 வயது பெண் ஒருவர், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் செங்குந்தர் பகுதியில் வசித்து வரும் 70 வயதான கோவிந்தசாமி, தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 

இப்படியான சூழலில், கோவிந்தசாமியின் மனைவி வசந்தா, கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

70 வயதான கோவிந்தசாமிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில், அவர்கள் எல்லாம் திருமணம் ஆகி தனித் தனியாகச் சென்று விட்ட நிலையில், வயதான காலத்தில் தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் பீல் பண்ணி உள்ளார்.

இதனையடுத்து, தனக்குத் துணை வேண்டும் என்று நினைத்த அவர், அங்குள்ள திருமண தகவல் மையத்தைத் தேடிச் சென்று உள்ளார்.

அந்த திருமண தகவல் மையத்தில் உள்ள பணியாளர்கள் “சொல்லுங்க சார்? யாருக்கு வரன் பார்க்க வேண்டும்? பேரனுக்கா? பேத்திக்கா?” என்று கேள்வி கேட்டு உள்ளனர்.

இதனைக் கேட்டு சற்று தடுமாறிய அவர், பின்னர் சுதாரித்துக்கொண்டு “எனக்குத் தான் பெண் பார்க்க வேண்டும்” என்று, கூறி உள்ளார். 

இதனைக் கேட்டு சற்று ஷாக்கான அந்த பணியாளர்கள், பின்னர் தங்களது வேலையைச் செய்வோம் என்று நினைத்து, கோவிந்தசாமியின் புகைப்படம் மற்றும் விபரங்களை பெற்றுக்கொண்டு, விளம்பரம் செய்து உள்ளனர். 

அதன் படி, அடுத்த சில நாட்களில் சீர்காழியை சேர்ந்த 49 வயதான விஜயசாந்தி என்ற பெண், “திருமணம் செய்துகொள்ள விருப்பம்” தெரிவித்திருக்கிறார்.

அதன் படி, திருமணத் தகவல் மையத்தில் இருந்து கோவிந்தசாமியின் செல்போன் நம்பரைய பெற்றுக்கொண்டு, விஜயசாந்தி பேசியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, 49 வயதான விஜயசாந்தியே, 70 வயதான மணமகன் கோவிந்தசாமியின் வீட்டுக்கு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று மாப்பிள்ளை பார்க்க சென்று உள்ளார்.

அப்போது, மாப்பிள்ளை பார்த்துவிட்டு உடனே அவர் வீடு திரும்பாமல், 2 நாட்கள் அங்கேயே அவர் தங்கியிருந்து விட்டு, அதன் பிறகே அவர் வீடு திரும்பியிருக்கிறார். 

அதன் பிறகு, மீண்டும் அவர் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று கோவிந்தசாமி வீட்டுக்கு சென்ற அந்த 49 வயதான பெண், வீட்டில் கோவிந்தசாமி அசந்த நேரம் பார்த்து, அவருடைய மனைவி வசந்தாவின் 9 பவுன் தாலி சரடினை, அவரது புகைப்படத்திலேயே மாட்டி வைத்து இருந்தை, நைசாக எடுத்து வைத்துக்கொண்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளார்.

இதனையடுத்து, 49 வயதான விஜயசாந்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் நம்பர் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.

பின்னர் தான் தெரிந்தது, அந்த பெண் அளித்த பெயரும், ஊரும் எல்லாமே பொய்யான தகவல் என்று, இதனால், ஏமாந்து போய்விட்டதை தனது 2 மகள்களிடம் சொல்லி அவர் புலம்பி தவித்திருக்கிறார்.

இப்படியான நிலையில் தான், நேற்று முன் தினம் கடந்த 12 ம் தேதி அன்று சின்ன சேலம் பேருந்து நிலையத்தில் கோவிந்தசாமி தனது மகள்களுடன் நின்றிருந்த போது, அங்கே வந்த விஜயசாந்தி எதார்த்தமாக வந்து மாட்டிக்கொண்டார். 

அப்போது, அந்த பெண்ணை அங்கிருத்து தப்பித்துச் செல்ல முடியாமல் பிடித்தக்கொண் கோவிந்தசாமியும், அவரது இரு மகள்களும், அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசாரிடம், திருமணம் செய்துகொள்வதாக மோசடி செய்த அந்த 49 வயது பெண்ணை ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், விஜயசாந்தியை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.