பொள்ளாச்சி அருகே 75 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள நம்பியமுத்தூர் பகுதியில் கணவனை இழந்த 75 வயது மூதாட்டி ஒருவர், அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் வசித்து வருகிறார். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 23 வயது மதிக்கத் தக்க வெள்ளிங்கிரி என்ற இளைஞர், சற்று சபலப்பட்டு உள்ளார். இதனால், மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட அந்த இளைஞன், தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, உடனடியாக கூச்சல் போட்டு உள்ளார். அப்போது, பக்கத்துத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த நபர்கள் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அப்போது, அக்கம் பக்கத்தினர் வருவதைப் பார்த்த வெள்ளிங்கிரி, அங்கிருந்து தப்பிச் செல்ல பார்த்து உள்ளனர்.

அந்த நேரம் அந்த மூதாட்டி, மீண்டும் சத்தம் போட்டு,“அவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டான்” என்று, சத்தம் போட்டு கத்தி உள்ளார். 

இதனையடுத்து, தப்பிச் சென்ற வெள்ளிங்கிரியைப் பிடிக்கச் சென்ற போது, அவர் யார் கையிலும் அகப்படாமல் தப்பித்துச் சென்று, தலைமறைவானார். 

இதனையடுத்து, அங்குள்ள கோமங்கலம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டி புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான வெள்ளிங்கிரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

மேலும், இளைஞனால் பாலியல் தொல்லைக்கு ஆளான மூதாட்டி, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், கொடுங்கையூர் அருகே இளம் பெண்ணுடன் தனிமையிலிருந்த டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பறித்த செய்தியாளர் 
உள்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்த 45 வயதான ஆரோக்கியசாமி, கொடுங்கையூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். 

இப்படிப்பட்ட சூழலில், ஆரோக்கியசாமியும் அதே பகுதியில் வசித்து வரம் இளம் பெண் ஒருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். 

மேலும், நேற்றிரவு ஆரோக்கியசாமி அந்த இளம் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தனிமையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், ஆரோக்கியசாமி, கதவைத் திறந்து பார்த்து உள்ளார். அப்போது, உள்ளே நுழைந்த 2 பேர், தாங்கள் பத்திரிகையாளர் என அவரிடம் கூறி உள்ளனர். 

மேலும், இருவரும் ஆரோக்கியசாமியிடம் யார் இந்தப் பெண் எனக் கேட்டதுடன், இதைப் பத்திரிகையில் வெளியிடப் போவதாகவும் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். 

அத்துடன், பத்திரிகையில் வெளியிடாமல் இருக்க 20 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும், அவர்கள் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால், பயந்துபோன ஆரோக்கியசாமி, அவர்கள் கேட்டது படியே, 20 ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு இருவரும் அங்கிருந்து சென்ற பின்னர், ஆரோக்கியசாமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்ற, தமிழ்தலைமுறை செய்தியாளரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைச் செயலாளருமான அருண்குமார் என்ற இளைஞனையும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 32 வயதான ஷாம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

அதே நேரத்தில் அவர்கள் இருவரும் அந்த பகுதியில் இது போல் வேறு யாரையும் மிரட்டி பணம் பறித்துள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.