பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி 15 பேர் பலி
By Arul Valan Arasu | Galatta | 03:05 PM
பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா பகுதியில் இன்று காலை பயணிகளுடன் வந்த பேருந்தும், எதிரே வந்த சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தின் முன் பக்கம் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சுமார் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து, ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பேருந்தும் - லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.