கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதாகவும், ஆன்லைன் வகுப்புக்களை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதனை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், தமிழக அரசின் ஆன்லைன் விதிகளின்படி, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது எனவும், ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புக்கள் நடத்தலாம் எனவும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. மத்திய அரசு தரப்பில், டிஜிட்டல் வழிக் கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்த ஒரு சுமையும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடையில்லை எனக்கூறி மனுதார்கள் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும், ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும், மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகள் தொடரப்படும் என்றாகிவிட்ட நிலையில், 'ஆன்லைன் வகுப்பில், கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, மாணவர்களை வற்புறுத்தக்கூடாது' என, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :

``அனைத்து பள்ளிகளிலும், 'ஆன்லைன்' வகுப்புகளை கண்காணிக்க, ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள், 'ஆன்லைன்' வகுப்பு குறித்த விபரங்களை, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்ட தேதி, ஆலோசகர் பெயர், பதவி, தொடர்பு எண், 'இ- - மெயில்' முகவரி போன்ற விபரங்களை பெற வேண்டும். அவர்களுடன், முதன்மைக் கல்விஅலுவலர்கள் தொடர்பில் இருக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக, புகார்கள் வருகிறதா என, கண்காணிக்க வேண்டும்.ஆன்லைன் வகுப்பு ஆலோசகர்கள் குறித்த விபரங்களை, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.பள்ளி இணையதளத்திலும், அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும்.ஆன்லைன் வகுப்புகளுக்கு, வருகைப் பதிவேடு அல்லது மதிப்பெண்கள் கணக்கிடுவது கூடாது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு, எக்காரணம் கொண்டும், மாணவர்களை வற்புறுத்தக் கூடாது; அது கட்டாயமல்ல.இணைய வழிக் கல்வி தொடர்பான புகார்களை, மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின், grievanceredressaltnpta@gmail.com என்ற, இ -- மெயில் முகவரிக்கு, பெற்றோர் அனுப்ப லாம். அந்த புகார்கள், உரிய நடவடிக்கைக்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படும்.மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான கவுன்சிலிங் பெற, '14417' என்ற, எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்விபரங்களை, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்"

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இவையாவும் ஒருபுறமிருக்க, தமிழகத்தில் வரும் 21 ந்தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா என பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.