சென்னையில் பாலியல் தொழிலில் சம்பாதித்த பணத்தைப் பங்கு போடுவதில் பிரச்சனை எழுந்த நிலையில், இளைஞர் ஒருவரை இளம் பெண் அடித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பெண்களுக்கான காலம் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்தி உள்ளது.

சென்னை அசோக் நகர் ராகவன் காலணியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இளைஞர் ஒருவர் தீக்காயங்களோடு மயக்கிய நிலையில் கிடப்பதாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு வந்த போலீசார், மயங்கிக் கிடந்த இளைஞரை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், “அவர் டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட  தீபக் என்பதும், தி.நகரில் துணி வியாபாரம் செய்து வரும் நிலையில், அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 2 வது தளத்தில் வசித்து வருவதும்” தெரிய வந்துள்ளது.

அத்துடன், “வீட்டில் சமைக்கும் போது, திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதாகவும், அதனால் மயங்கியதாகவும்” கூறியுள்ளார். இதனையடுத்து, தீபக்கை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீபக்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதைப் பார்த்துச் சந்தேகமடைந்து போலீசாரிடம் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, தீபக் மீது சந்தேகப்பட்ட போலீசார், அவரது வீட்டைச் சோதனை செய்துள்ளனர். அப்போது, அவரது வீடு வெளிப்புறம் பூட்டியிருந்தது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை உண்டு பண்ணியது. இதனையடுத்து, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ரத்தக்கரைகளோடு கூடிய கத்தி, மண்ணெண்ணெய் கேன் ஆகியவைக் கிடந்ததைக் கண்டு போலீசாருக்கு இன்னும் சந்தேகம் வலுத்து உள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தீபக்கின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அதிகம் பேசிய 2 எண்களை வைத்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த செல்போன் எண்கள், மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும், குறிப்பிட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் சிசிடிவியை ஆய்வு செய்தபோது, அதில் சம்மந்தப்பட்ட இருவர் சந்தேக்திற்கு இடமளிக்கும் வகையில் வெளியேறிச் சென்றதும், அங்கிருந்து விமான நிலையம் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரின் அடையாளங்களை வைத்து, போலீசார் அவர்களை கைது செய்து, குமரன் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் டெல்லியைச் சேர்ந்த ஹம்தன், நிலா அக்தர் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சேர்ந்து தி.நகரில் துணி வியாபாரம் செய்து வந்ததாகவும், நாளடைவில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், ஹம்தன் வழிகாட்டுதல் படி மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து அழகிகளைச் சென்னைக்கு வரவழைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படித் தான் நிலா என்ற இளம் பெண், இவர்களுக்கு அறிமுகமானார்.

குறிப்பாக, வடமாநிலங்களில் இருந்து அழைத்து வரும் இளம் பெண்களை, 2, 3 நாட்கள் மட்டுமே சென்னையில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களை உடனடியாக விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

அப்படிதான், நிலாவையும் நேற்று முன் தினம் இரவு அவரது சொந்த ஊரான டெல்லிக்கு அவர்கள் அனுப்பி வைக்க இருந்தனர். ஆனால் நிலா மூலம் கிடைத்த பணத்தைப் பங்கு போடுவதில் தீபக், ஹம்தன் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஹம்தன் நிலா உடன் சேர்ந்து  தீபக்கை கத்தியால் குத்தியும், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியும் அவரை கொலை செய்ய முயன்று உள்ளனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து மும்பை செல்ல முயன்றனர்.

ஆனால், உயிர் பிழைக்கும் நோக்கில் வீட்டின் ஜன்னல் வழியாக தீபக் வெளியே எகிறிக் குதித்ததால், காவலாளி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.