ஃபேஸ்புக்கில் பழகிய பெண் மீது சபலப்பட்ட இளைஞன் ஒருவன் நேரில் பார்க்கச் சென்றபோது, அந்த இளைஞனிடமிருந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு நிர்வாணப்படுத்தி, அதை வீடியோ எடுத்து அந்த பெண், மிரட்டி விரட்டி அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி, முகம் தெரியா பெண்ணை பார்க்கச் சென்ற இளைஞன், மிரட்டப்பட்டு விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் வட மாநிலத்தில் நடக்கவில்லை. நம்ம தமிழ் நாட்டில் தான் அதுவும், திருச்சியில் தான் இப்படி ஒரு அதிர வைக்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 28 வயதான வினோத் குமார், அதே பகுதியில் வெப் டிசைனாராகப் பணியாற்றி வருகிறார். வினோத்திற்கு திருமணம் ஆன நிலையில், அவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தையும் உள்ளது.

வினோத் வெப் டிசைனர் என்பதால், எந்நேரமும் ஆன்லைனிலேயே இருந்து வந்துள்ளார். அப்போது, திருச்சியைச் சேர்ந்த நிஷா என்ற இளம் பெண், வினோத்திற்கு ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலமாக ஒரு ஆபாசப் படத்தை அனுப்பி வைத்து, அவருக்கு நட்புக்கான அழைப்பு விடுத்து உள்ளார்.

அந்த ஆபாசப் படத்தைப் பார்த்தும், நட்பு அழைப்ப விடுத்தது பெண் என்பதாலும் வினோத், சபலப்பட்டுள்ளார். இதனால், சபலம் மற்றும் டபுள் மீனிங் சாட்டிங் அவர்கள் இருவருக்குள்ளும் தொடர்ந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இருவரும் தங்களது செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டு உள்ளனர். இதனையடுத்து, இருவரும் மணிக்கணக்கில் பேசியும், சாட் செய்தும் வந்துள்ளனர்.

இருவரும் இப்படியே போனிலேயே பேசிக்கொண்டு வந்த நிலையில், நிஷாவிடம், “நான் உன்னை நேரில் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறி உள்ளார். அதன்படி, இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

இதனால், வினோத்தை திருச்சிக்கே வரச் சொல்லி, நிஷா அறிவுறுத்தி இருக்கிறார்.

திட்டமிட்ட படி, கடந்த 5 ஆம் தேதி வினோத் திருச்சியில் உள்ள காஜாமலை பகுதியில் உள்ள பள்ளியின் அருகே வந்து உள்ளார். 

அப்போது, இளம் பெண் நிஷாவும் அங்கு வந்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக இருவரும் அங்கே தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, திடீரென்று அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்து வினோத்தை கண்மூடித்தனமாகத் தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து, வினோத் வைத்திருந்த பர்ஸ், அவர் பயன்படுத்திய ஸ்மார்ட் போன், அவருடைய வங்கி ஏ.டி.எம். கார்டு, அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் 

ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு, வினோத்தை அடித்து அவர் அணிந்து இருந்த ஆடைகளை அவிழ்த்து அவரை நிர்வாணப்படுத்தி, அவரை வீடியோவும் எடுத்து மிரட்டி உள்ளனர்.

மேலும், இது தொடர்பாக யாரிடமாவது கூறினால், இந்த வீடியோவை இணையத்தில் பரப்பி விட்டுவிடுவதாகவும் கூறி மிரட்டி விரட்டி அடித்துள்ளனர். தன்னை ஒரு பெண் ஏமாற்றி வர வைத்து, அடித்து அவமானப்படுத்தி, தன்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு விரட்டி அடித்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாத வினோத், திருச்சியில் உள்ள கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நிஷா இருக்கும் இடத்தை வைத்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, நிஷா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வினோத்தை மிரட்டி எல்லா பொருட்களையும் பறித்துக்கொண்டு விரட்டி அடித்த அந்த 6 பேர் கொண்ட கும்பலையும் அதிரடியாகக் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வினோத்தை மிரட்டி எல்லாவற்றையும் பறித்துக்கொண்டது போல், வேறு யாரிடம் எல்லாம் இதுபோன்று மிரட்டி பணம் பறித்தீர்கள் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, பெண்களை ஆண்கள் ஏமாற்றிய காலம் மாறி, பெண்கள் ஆண்களை ஏமாற்றும் காலம் வந்துவிட்டது தற்போது மிகப் பெரும் பேரதிர்ச்சியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.