பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இ பாஸ் நடைமுறை, பொது போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு ஆகியவை மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டாலும், அதில் பணியாற்றுபவர்களும், வாடிக்கையாளர்களும் எளிதில் சென்று வர முடியாத சூழல் நிலவுகிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இ-பாஸ் முறை கிடையாது என்றும், மக்கள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதனை நீக்க வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இ-பாஸ் முறைக்கு எதிராக மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்ப்பும், கோபமும் வலுத்து வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் இ-பாஸ் இனித் தேவையில்லை எனக் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் உள்ள நிலையில் பணி நிமித்தமாக மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் இ-பாஸ் கிடைக்காமல் அவர்கள் அவதியுறுவதாகவும் கூறியுள்ளார். மிக மிக அவசியமான தேவைகளுக்கு கூட பலருக்கும் இ-பாஸ் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

``ஒரு சிலர் குறுக்கு வழியில் ஊழல் செய்து இ-பாஸ் வழங்க முயற்சிப்பதும், போலி இ-பாஸ் தயாரித்து வழங்குவதும் ஆங்காங்கே நடைபெறுவதாகவும் எல்.முருகன் புகார் தெரிவித்துள்ளார். இ-பாஸ் நடைமுறையில் உள்ளதால் கணவன் மனைவி சந்திக்க முடியாத நிலை, பெற்றோர் பிள்ளைகள் சந்திக்க முடியாத நிலை உள்ளது" என்று பாஜகவின் தமிழக தலைவர் முருகன் கூறியிருந்தார்.

இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை வலியுறுத்தி இருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசிடமிருந்து இது குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பேசியுள்ளார்.

கூட்டத்துக்குப் பின் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இ பாஸ் முறையை ரத்து செய்ய எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட போது, ``இ பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ பாஸ் நடைமுறை தொடரும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள் மத்தியில் முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றில் குறைபாடு இருக்கும் காரணத்தினால், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீடுகளுக்கே சென்று அரசால் வழங்கப்படும் முகக் கவசங்களை கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புப் பணிகளைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களைத் தீவிரமாகக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அளவில் சிறப்புக் குழுக்களை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மாநில அளவில் குழுக்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். சென்னையில் பின்பற்றிய நடைமுறைகள் பிற மாவட்டங்களிலும் பின்பற்றப்படும். குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படும். பரிசோதனை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன

24 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம். முகாம்களில் தரமான உணவு வழங்குவது குறித்து கண்காணிக்கப்படும். செங்கல்பட்டில் போதுமான வசதிகள் உள்ளன. கொரோனா குறித்து பொது மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு சார்பில் சொல்லப்பட்டுள்ளது.