தஞ்சை மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த ஆனந்த், வீடு கட்ட தனியார் வங்கியிடம் கடன் பெற்று அசலை விட அதிகமான தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனாலும் வங்கி அதிகாரிகள் மீதத் தொகையைக் கட்டுமாறு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி வங்கி அதிகாரிகள் ஆனந்த் வீட்டுக்கு நேரில் சென்று அங்கிருந்த அவரது மனைவி ஹேமாவிடம் வட்டியுடன் முழுத் தொகையும் செலுத்தாவிட்டால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

கடன் தவணையைக் கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டும் வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டதால், வங்கி வாசல் முன்பு ஆனந்த் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும்கூட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வை தொடர்ந்து, கொரோனா காலத்தில் கடன் தவணையை திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி உரிய கால அவகாசம் அளித்துள்ள நிலையில் தனியார் வங்கிகள் தாந்தோன்றிதனமாக நடந்துகொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமை தலைதூக்கியுள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :

``தமிழ்நாட்டில் கந்து வட்டி கொடுமை கொடி கட்டி பறக்கிறது. இக்கொடுமை தாங்காமல் பலர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டை, திருநெல்வேலி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளது
 
2003ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கந்து வட்டி தடுப்புச் சட்டம் அமலாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற உயிரிழப்புச் சம்பவங்களும், தற்கொலை சம்பவங்களும் நடைபெறுகின்றன

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஏழை, எளிய மக்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி சிக்கித் தவித்து வருகின்றனர். கடனை கட்ட முடியாத காரணத்தினால் நுண்நிதி நிறுவனங்கள் அடியாட்களை வைத்து மிரட்டி வட்டிக்கு மேல் வட்டி செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கின்றனர். கொரோனா காலத்தில் இ.எம்.ஐ., கடன்கள், நுண்நிதி கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவற்றை வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு அடியாட்களை வைத்து மிரட்டி கடன் வசூலை செய்து வருகின்றனர்

ஆனந்த்தைத் தற்கொலைக்குத் தூண்டிய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கிடுவதோடு அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

மேலும் இதுபோன்ற உயிரிழப்புகளும், துயரச் சம்பவங்களும் தமிழகத்தில் இனி நடைபெறாமலிருக்க தமிழக அரசு உடனடியாக கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்புகிற வரை நுண்நிதி கடன், சுய உதவிக்குழு கடன், இ.எம்.ஐ., கிரெடிட் கார்டு கடன் தவணை, வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் வசூலையும் ஒத்தி வைக்க வேண்டும். மேலும் இக்காலத்துக்கான வட்டித் தொகையினையும் ரத்து செய்ய வேண்டும்" 

என்று கூறியிருக்கிறார்.