கணவனை பிரிந்து தனியாக வசித்த பெண்ணோடு உல்லாசமாக வாழ்ந்த காதலன், வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆடலூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான மாலதி என்ற இளம் பெண்ணுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. 

திருமணம் ஆன அடுத்த சில மாதங்களிலேயே கணவருடன் அவருக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை வந்துள்ளதால், கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை விட்டு மாலிதி பிரிந்துள்ளார். கணவனைப் பிரிந்த அடுத்த சில மாதங்களில் அவருக்குக் குழந்தையும் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தன் குழந்தையுடன் மாலதி தனியாக வசித்து வந்துள்ளார். 

கணவனைப் பிரிந்த மாலதி, ஆடலூர் கிராமத்தில் இருந்து அருகில் உள்ள கே.சி. பட்டி கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு தன் குழந்தையுடன் அவர் வசித்து வந்துள்ளார்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான சதீஷ் என்பவருடன் மாலதிக்கு காதல் மலர்ந்துள்ளது. சதீஷ் - மாலதி இடையேயான காதல் நாளுக்கு நாள் நெருக்கமாகவே, அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து உல்லாசமான ஒரு வாழ்க்கையே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மாலதி தன் காதலன் சதீஷை கணவனாகவே நினைத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படி, காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே, ஒரே வீட்டில் ஒன்றாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.

தற்போது மாலதியின் மகனுக்கு 4 வயது ஆகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், காதலன் சதீஷுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தகவல் மாலதிக்கு நேற்று காலை தான் தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாலதி, நேராக சதீஷ் 
வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு நியாயம் கிடைக்காத நிலையில், காதலன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 

இதனால், அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர், அந்த பெண்ணை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து கிளம்பிய அந்த பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். காதலன் வீட்டின் சற்று அருகிலேயே, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி, தீயைப் பற்ற வைத்து உள்ளார். இதில், தீ பற்றி எரிந்த நிலையில், கடும் அலறல் சத்தத்துடன் இங்கம் அங்கமாக ஓடி, சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து, அந்த கிராமத்து மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்து கொண்டார் மாலதியின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது மலாதி - சதீஷ் காதல் விசயம் தெரிய வந்தது. 

இதனையடுத்து. சதீஷை கைது செய்ய அவர் வீட்டிற்குச் சென்ற நிலையில், அதற்குள் அவர் தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, தலைமறைவான அவரை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.