கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூடுதலாக 118 அவசர ஊர்தி வாகனங்களின் சேவையை சென்னை தலைமை செயலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக 5,000 - ஐ ஒட்டி வந்துகொண்டிருந்த புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நேற்று ஒரே நாளில் 6,495 என்றானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 149 பரிசோதனை மையங்களில் இன்று 83,250 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 47 லட்சத்து 38 ஆயிரத்து 47 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் இன்று 80,100 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 45 லட்சத்து 79 ஆயிரத்து 770 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்கால அடிப்படியில்  எடுத்து வருகின்றது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்து செல்வதற்காக அவசர ஊர்தி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. 

தற்பொழுது தமிழகம் முழுவதும் 1,005 அவசர ஊர்திகள் இயங்கி வரும் நிலையில், இந்த சேவையை மேலும் விரிவுபடுத்த தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் , 108 அவசர கால ஊர்தி சேவைக்காக , 103 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 அவசரகால ஊர்திகளை கூடுதலாக கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.

அதன் ஒரு பகுதியாக,  முதற்கட்டமாக 118 அவசர கால ஊர்திகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.  இதில் தமிழக அரசு சார்பில் 20.65 கோடி ரூபாய் மதிப்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 1.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 வாகனங்களும்,  3.09 கோடி மதிப்பில் 10 ரத்த தான ஊர்திகளும் பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் BLS எனப்படும் அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள் மற்றும் ALS எனப்படும் மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகளும் செயல்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அவசரகால ஊர்திகளில் செயற்கை சுவாச கருவி, ஆக்ஸிஜன் அளவீட்டு கருவி, மின் அதிர்வு சிகிச்சை கருவி போன்ற உயர்தர கருவிகளுடன் 60 மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கையாள அவசரகால மேலாண்மை தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஊர்திகள் இன்று முதல் செயல்பட இருப்பதாகவும்,  தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட உள்ளதாகவும், சில தினங்களில் மீதமுள்ள அவசர ஊர்திகளும் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 1005 ,108 அவசர ஊர்திகள் இயங்கி வருகிறது. இதில் 65 பச்சிளம்  குழந்தைகளுக்கான ஊர்திகளும், 871 அடிப்படை அவசரகால ஊர்தி மற்றும் மலையோரப் பகுதிகளுக்கான ஊர்தி களும், 65 மேம்பட்ட அவசர கால ஊர்திகளும், 41 இருசக்கர வாகன ஊர்திகளும் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.