ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ்க்கு, உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஜய் வழக்கு
தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அத்துடன், நடிகர் விஜயக்கு எதிராக மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி, தனது கண்டனங்களையும் அந்த நீதிபதி கூறியிருந்தார்.

இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அபராதம் விதித்ததற்கு இடைக்கால தடையையும் அவர் பெற்றார். 

தற்போது, நடிகர் விஜயை போலவே, கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

“தனது காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து” நடிகர் தனுஷ் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில், காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அப்போது உத்தரவிட்டது. அதன்படி, அந்த காரை நடிகர் தனுஷ் பதிவு செய்து கொண்டார்.

அதன் பிறகு, பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்து இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி, “பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட, வரி செலுத்தி வருகிறார்கள் என்றும், ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள்” என்று கூறி, நடிகர் தனுஷ்க்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

குறிப்பாக, “பெட்ரோலில் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? என்றும், பால்காரர் வரி கட்டும் போது நடிகர் வரி கட்டக்கூடாதா?” என்றும், நீதிபதி கண்டனம் தெரிவித்தார். 

தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதி, “நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள், ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள்” என்றும், கடுமையாகவே கூறினார். 

முக்கியமாக, ““மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது, வரியை செலுத்த வேண்டியது தானே?” என்றும், நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், “இது தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும், தான் யார்? தான் என்ன தொழில் செய்பவர்? என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், “எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வணிக வரி துறை கணக்கீடு செய்து பகல் 2.15 க்குள் கூற வேண்டும்” என்றும், நீதிபதி தெரிவித்துள்ளார்.

“தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து, நடிகர் தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்தி வைத்த நிலையில், பிற்பகலில் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும்” என்றும், கூறியுள்ளார்.