தலைமறைவான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 5 பேரில் 3 பேர், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மீதமுள்ள இரு ஆசிரியர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.  

கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக, புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்டன. 

அதன் பிறகு, தலைமறைவான சிவசங்கர் பாபாவை தேடி வந்த நிலையில், டெல்லியில் பதுங்கியிருந்த அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். 

அத்துடன், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

 அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பெண் பக்தருமான பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாகப் புகாருக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களைக் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மேலும், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில், இது வரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. 

இதனால், சிவசங்கர் பாபா பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்து, வரும் 19 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டது.

முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்குச் சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டு, சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாகக் கூறப்படும் ஆசிரியைகள் 5 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் கொடுக்க சென்றனர். 

அப்போது, வீட்டை பூட்டைவிட்டு சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரும் அங்கிருந்து தப்பியோடியதாக செய்திகள் வெளியானது. 

இதனால், வேறு என்ன செய்வது என்று யோசித்த சிபிசிஐடி போலீசார், கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளில் சம்மனை ஒட்டினார்கள். 

அதாவது, பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுக்க உதவியதாக சுஷில்ஹரி பள்ளி ஆசிரியைகள் காயத்ரி மற்றும் பிரவீனா உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரையடுத்து, சம்மந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பி நேற்று முன் தினம் திங்கள் கிழமை முதல் அவர்களை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டிருந்தது. 
ஆனால், அவர்கள் தப்பியோடியதால், தலைமறைவாக இருக்கும் ஆசிரியைகளைப் பிடிக்கவும், தலைமறைவாக உள்ள சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியைகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணியிலும் சிபிசிஐடி போலீஸார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இதனால், இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகளில் 5 பேரில், தற்போது 3 பேர் மட்டும், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

முன்னதாக 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இவர்களில் 3 பேர் மட்டுமே தானாக முன்வந்து நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்கள். அவர்களின் வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் தற்போது பதிவு செய்துகொண்டனர். 

குறிப்பாக, “தற்போது வரை 2 ஆசிரியர்கள் தலைமறைவாக இருப்பதாகவும்” சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர். தற்போது, அவர்கள் இருவரையும் தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.