கஞ்சா போதையில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்!
By Arul Valan Arasu | Galatta | 05:31 PM
சென்னையில் பட்டப் பகலில் கஞ்சா போதையில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை பகுதியில், பட்ட பகலில் பாலாஜி, செந்தில்குமார், அலெக்ஸ் ஆகிய 3 பேரும் மது மற்றும் கஞ்சா போதையில் நிதானமில்லாமல் நடத்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதை வழியாக ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அந்த பெண்ணை வழிமறித்து 3 பேரும் நின்றுள்ளனர். அதில், ஒருவன் பெண்ணை கட்டிப்பிடிப்பது போல், பெண்ணின் மீது சாய்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது, மற்ற இருவரும் பெண்ணின் பின் பக்கம் வந்து நின்றுகொண்டு, பெண்ணை மிரட்டிக்கொண்டு இருந்ததாகத் தெரிகிறது.
போதை ஆசாமியின் பாலியல் துன்புறுத்தலால் பயந்துபோன அந்த பெண், சத்தம் போட்டு கடும் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஓடிவந்து, 3 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், 3 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும், படப்பை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெயிண்டர் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், மது மற்றும் கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சென்னையில் பட்டப்பகலில் கஞ்சா போதையில் பெண்ணிடம் 3 இளைஞர்கள் தவறாக நடக்க முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.