கேரளாவில் அரை நிர்வாண உடம்பில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைவது போல் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர்  ரெஹானா பாத்திமாவை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 
 
கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட “பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போது, அந்த தீர்ப்பை அடுத்து கனக துர்கா, பிந்து என்ற 2 பெண்களும் கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குச் சென்று வந்தனர். இதனையடுத்து, கேரளாவைச் சேர்ந்த ரெஹனா பாத்திமாவும் சபரி மலை ஏற முயன்று, பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியில் பின் வாங்கினார். 

இதனைத் தொடர்ந்து, ரெஹனா பாத்திமா மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில், அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரெஹனா பாத்திமாவை, பி.எஸ்.என்.எல் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில், சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். அதாவது, ரெஹானா பாத்திமா, கடந்த ஜூன் 19 ஆம் தேதி அன்று, தனது அரை நிர்வாண உடலில்.. தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரைந்த ஒரு வீடியோ பதிவை, யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, அதனைத் தனது பேஸ்புக்கில் பகிர்ந்தார். 

குறிப்பாக, அந்த வீடியோவை #BodyArtPolitics என்ற ஹேஷ்டேக்குடன் “பாடி மற்றும் பாலிடிக்ஸ்” என்ற தலைப்பில், அவர் பகிர்ந்து இருந்தார்.

அந்த வீடியோவில், “அரை நிர்வாண நிலையில் ரெஹனா பாத்திமா இருக்கிறார். அப்போது, அவருடைய சிறு வயது மகனும், மகளும் தாயார் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல்” அந்த வீடியோ படமாக்கப்பட்டு இருந்தது. அத்துடன், “தன்னுடைய அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள், பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால் தான், இந்த சமூகம் மாறும்” என்று, அவர் அதில் கருத்து தெரிவித்து இருந்தார்.

அதேபோல், “பாலியல் மற்றும் நிர்வாணம் தடை செய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை, மீண்டும் வலியுறுத்தவே இந்த வீடியோ பதிவு எடுக்கப்பட்டது” என்றும், ரெஹனா பாத்திமா அதில் விளக்கம் அளித்திருந்தார். 

அத்துடன், “ஆண் உடலுடன் ஒப்பிடும்போது, பெண்ணின் உடலும் அவளது நிர்வாணமும் 55 கிலோவுக்கு மேல் சதை, கால்கள் இருப்பதைக் கண்டு லெகிங்ஸ் தூண்டப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ள ரெஹனா பாத்திமா, “அதே நேரத்தில் தோற்றத்தில் ஆண் நின்றால் ஆபாசம் இல்லை என்றும், இது சமூகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தவறான பாலியல் உணர்வுதான்” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், “அழகு பார்ப்பவரின் கண்ணில் இருப்பது போலவே, பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளதாகவும்” அந்த வீடியோவில் ரெஹனா பாத்திமா கருத்து தெரிவித்திருந்தார். 

இப்படி சர்ச்சைக்குரிய காட்சிகள், அது படமாக்கப்பட்ட விதம், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் என்று அது பகிரப்பட்டதால், இந்த வீடியோ பேஸ்புக்கில் பெரும் வைரலானது.
 
இந்த வீடியோ பெரும் வைரலானதால், கேரளாவில் மீண்டும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக, சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளி வராத வகையில், ரெஹனா பாத்திமா மீது கேரளா திருவல்லா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

குறிப்பாக, ரெஹனா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது ஆகாமல் இருக்க ரெஹனா பாத்திமா, கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தன் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுக்கொடுக்கவே, அந்த வீடியோ வெளியிட்டதாகவும், அவர் விளக்கம்” அளித்திருந்தார். மேலும், குழந்தைகளுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்றும், அதற்காகவே, அந்த வீடியோ பதிவு எடுக்கப்பட்டது” என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி உன்னி கிருஷ்ணன், “குழந்தைகளுக்கு பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்க விரும்பினால், அதை உங்கள் வீட்டில் செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, ரெஹனா பாத்திமாவின் மனுவையும் அவர் தள்ளுபடி செய்தார்.

ரெஹனா பாத்திமாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், ரெஹனா பாத்திமா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.