இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளார்.

கொரோனா என்னும் பெருந்தொற்றால், உலகமே திக்குத் தெரியாமல் திண்டாடி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றைச் சரி செய்யப் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இழந்த பொருளாதார பாதிப்பை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று ரகுராம் ராஜன் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

அதன்படி, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பொருளாதாரத்தில் மிக மோசமாக சேதம் அடைந்த நிறுவனங்கள் இருக்கிறது என்றும், கொரோனா வைரஸ் காலத்துக்கு பிந்தைய மீட்புப் பணி என்பது, பழுதுபார்க்கும் செயல் முறையுடன் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவில் மிகப் பெரிய திவால் நிலைகள் நிச்சயமாக இருக்கக் கூடும் என்றும், ஐரோப்பாவிலும் இது நடந்திருப்பதாகவும்” கூறிய ரகுராம் ராஜன், “நாம் பொருளாதாரத்தைச் சரி செய்தே ஆக வேண்டும்” என்றும் கூறினார். “நம் வளங்களை மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், மூலதன வடிவமைப்புகளை மறு சீரமைக்க வேண்டும்” என்றும் ரகுராம் ராஜன் வலியுறுத்தி உள்ளார்.

“இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறது என்றும், தற்போது முக்கிய பிரச்சினை, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான்” என்றும் அவர் தெரிவித்தார். 

“துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் பரவல் என்பது, கட்டுப்படுத்துவதற்குக் கடினமாக இருக்கிற வகையில் உள்ளதாகவும், இந்த கொரோனா வைரஸ் தொற்று, மிகப்பெரிய அளவில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி உள்ளது” என்றும், அவர் கவலைத் தெரிவித்தார். 

மேலும், “கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே தற்போது கதி கலங்கி நிற்கிறது என்றும், ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் புதிய உச்சங்களைத் தொட்டுக்கொண்டே செல்வது, எங்கே போய் முடியும் என்று ஒவ்வொருவரையும் விழி பிதுங்க வைத்துள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

இதனால், “இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத்தில் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன என்றும், அவர் குறிப்பிட்டார்.

“வளர்ந்த நாடுகளில் 45 முதல் 50 சதவீதத்தினர் வரையிலான வீடுகளில் இருந்து வேலை பார்க்க முடியும் என்றும், இதன் காரணமாகக் குறிப்பிட்ட இந்த நாடுகள், ஊரடங்குக்கு மத்தியிலும் செயல்பட இயலும்” என்றும் கூறியுள்ளார்.
 
“அதே நேரத்தில், ஏழை நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள், புதிதாகத் தோன்றி வருகிற சந்தைகள் போன்றவற்றில் வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது குறைவாகவே இருப்பதாகவும்” அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் இத்தகைய சூழலில், அமெரிக்காவுக்கும் - சீனாவுக்கும் இடையேயான மோதல்கள் மேலும் அதிகரிக்கும் என்றும், இதனால் உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும்” குறிப்பிட்ட ரகுராம் ராஜன், இதைப் பயன்படுத்தி இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகள் முன்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியம்” என்றும் அவர் தெரிவித்தார்.

“கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த நாடுகள் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்படுகிற நிலையில், அமெரிக்க - சீன மோதலால் ஏற்படுகிற உலகளாவிய வர்த்தக பாதிப்பைப் பயன்படுத்தி, இந்தியா தன் ஒட்டுமொத்த சக்தியையும் பயன்படுத்தி இத்தகைய நெருக்கடியில் இருந்து மீண்டு வெளியே வர வேண்டும்” என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.