கடந்த 2019 செப்டம்பர் மாதம் 6 அன்று ரிபப்ளிக் டிவியின் ஒரு செய்தி நிகழ்ச்சியில்,  நிலவுக்குச் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலன் குறித்து அர்னாப் கோஸ்வாமி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிரிட்டனில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை பாகிஸ்தான் நாட்டுடன்  ஒப்பிட்டு பாகிஸ்தானை மோசமாக அர்னாப் பேசியிருக்கிறார். 


’நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம். அவர்கள் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர். பாகிஸ்தானில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் தீவிரவாதிகள். அங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தீவிரவாதிகள்’ என்று அர்னாப் பேசியதாகவும் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்களும் பாகிஸ்தான் மீது வெறுப்பான வார்த்தைகள் பேசியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 


இதனால் பிரிட்டனில் ரிபப்ளிக் டிவி நிகழ்வுகளை ஒளிபரப்பும் ஓர்ல்ட் வைட் மீடியா நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை 20 ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. மேலும் ரிபப்ளிக் டிவி நிபந்தனை அற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.