எக்கச்சக்கமான தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடி ஆச்சர்யப்படுத்தினார், அவர் பாடலை கேட்டு அசந்து போன நடுவர்கள், அவரை வெகுவாக பாராட்டினார்கள். தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருவதுடன், தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் என பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இதுவரை 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டு ரசிகர்களின் பேராதரவோடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது. ஆரம்பம் முதலே அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக இசையமைப்பாளர் தமன் உறுதிளியத்துள்ளார். அடுத்ததாக இந்த சீசனில் கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாகவும் தமன் உறுதியளித்திருக்கிறார்.

இதனிடையே கடந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஹர்ஷினி நேத்ரா எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரை சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது. ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவாராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் திறமையால் அனைவரையும் மயக்கி வருகிறார் ஹர்ஷினி நேத்ரா. கடந்த வார நிகழ்ச்சியில் ‘ராசாத்தி’ பாடல் பாடி அசத்திய அவர் அடுத்ததாக செய்த மிமிக்ரி தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் பாடகி தீ ஆகியோரின் குரலில் அச்சு அசலாக அவர்கள் பாடிய பாடலை அச்சரம் பிசகாமல் பாடி அசத்தி, அனைவரையும் மிரள வைத்தார். இறுதிச்சுற்று படத்தில் இடம்பெற்ற பாடகி 'தீ' பாடிய 'ஹே சண்டகாரா' பாடலையும் ஜெய் பீம் படத்தில் 'வைக்கம் விஜயலக்ஷ்மி' பாடிய 'மண்ணிலே ஈரம் உண்டு' பாடலையும் அச்சு அசலாக அவர்கள் பாடியது போலவே சிறுமி பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார். நடுவர்கள் அனைவரும் அவரின் திறமையை பார்த்து வியந்து, அவரை வெகுவாக பாராட்டினர். அவர் மிமிக்ரியில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திறமையால் ஒளிரும் பலருக்கு ஒரு ஒரு சிறப்பான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.