தமிழ் சினிமாவின் தனி சிறப்பு மிக்க இயக்குனராகவும் மிக முக்கிய நடிகராகவும் திகழும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இயக்குனராக முதல் முறை சில லட்சங்களில் குஷி திரைப்படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையில் தனது உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் பேருதவி செய்திருக்கிறார். முன்னதாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அட்டகாசமான நடிகராக ரசிகர்களை மகிழ்வித்து வரும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நடிப்பில் அடுத்தடுத்து மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என வரிசையாக அதிரடியான படங்கள் தயாராகி வருகின்றன. இதனிடையே மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பிரியா பவானி சங்கர் நடிப்பில், மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் பொம்மை திரைப்படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற எஸ்.ஜே.சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது திரைப்பபயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் பின் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் தற்போது சின்ன திரையில் பிரபல நடிகராக வலம் வருபவருமான மாரிமுத்து அவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு எஸ்.ஜே.சூர்யா அவர்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “எஸ்.ஜே.சூர்யா பற்றிய நெகிழ்வான விஷயங்களில் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். அதாவது அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்பட்டு கொண்டு 50 ரூபாய் 100 ரூபாய் பேட்டா வாங்கிக் கொண்டு இருந்ததுதான் அசிஸ்டன்ட் டைரக்டர்களின் வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு அசிஸ்டன்ட் டைரக்டருக்கு போராடி ஒரு படம் கிடைக்கிறது. அதுவும் அஜித் சார் ஹீரோ, சிம்ரன் மற்றும் ஜோதிகா ஹீரோயினாக நடிக்கிற ஒரு படம் அந்த படம் வாலி. அந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டது அந்த படத்திற்கு அவர் சம்பளம் என்று 5 பைசா கூட வாங்கவில்லை. அந்தப் படம் ரிலீஸான பிறகு குஷி என்று ஒரு பெரிய படம் கமிட் ஆகிறார். ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் சார் படம். விஜய் சார் ஹீரோ ஜோதிகா மேடம் ஹீரோயின் இப்படி ஒரு படம் பெரிய படம் கமிட் ஆகிறார். அந்தப் படத்திற்கு சில லட்சங்கள் அவருக்கு அட்வான்ஸாக வருகிறது. நாமெல்லாம் அப்படி வந்தால் என்ன செய்வோம்? நானெல்லாம் அந்த பணத்தை ஒதுக்கி விடுவேன். அந்த பணத்தை பொண்டாட்டி கையில் கொடுப்பேன் அல்லது அதில் இருந்து ஐந்து பைசா கூட எடுக்க மாட்டேன். அப்படி தான் நானெல்லாம் பண்ணுவேன். ஆனால் அந்த சில லட்சங்களை அப்படியே கொண்டு போய் ஒரு பைக் ஷோரூம் கம்பெனியில் கொடுத்து எல்லோருக்கும் பைக் வாங்கி கொடுத்தார். அசிஸ்டன்ட் டைரக்டர்கள் எல்லோருக்கும் பைக் எனக்கு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவருக்கும் வண்டி. அவர் இன்னும் அதை ஞாபகமாக வைத்திருக்கிறார். அப்படி அதை செய்வதற்கு ஒரு மனசு வேண்டும்.” என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரஸ்ய நினைவுகளை பகிர்ந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.