தமிழ் சினிமாவின் மாபெரும் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் நாவல் படமாக்கம் இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது விடா முயற்சியினால் லைகா தயாரிப்பில் இணைந்து அந்த திட்டத்தை சாத்தியமாக்கினார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் உலகமெங்கும் பல மொழிகளில் வெளியானது. சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் திரையுலகின் பெருமைமிக்க இந்த படைப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அதன்படி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் பாடல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவு உயர்த்தியது. வரலாற்று புனைவு கதையை மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி சாதனை படைப்பாக ரசிகர்கள் அங்கீகரித்த பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் சிறப்பு பாடலான ‘PS anthem’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. அதே நேரத்தில் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான விளம்பர வேலையில் படக்குழு அதிரடியாக இறங்கவுள்ளது. விளம்பர வேலைக்காக படத்தில் நடித்த நடிகர்கள், குழுவினர் ஆகியோர் இந்திய முழுவதும் முக்கிய நகரங்களில் ரசிகர்களை சந்திக்க சுற்று பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர். இது குறித்து ‘chozha tour’ என்ற பெயரில் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதில்,

வரும் ஏப்ரல் மாதம் 15 ம் தேதி சென்னையில் ரசிகர்களை சந்திக்கவிருகின்றனர். பின் ஏப்ரல் 16 கோவை மாவட்டத்திலும் ஏப்ரல் 17 மீண்டும் சென்னையிலும் ரசிகர்களை படக்குழு சந்திக்கவுள்ளனர். தொடர்ந்து ஏப்ரல் 18 டெல்லி தலைநகரத்திலும் பின் ஏப்ரல் 20 கொச்சியிலும் ஏப்ரல் 22 பெங்களூரிலும் ஏப்ரல் 23 ஹைதராபாத்திலும் மற்றும் ஏப்ரல் 24, 25 மும்பையிலும் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். பின் மீண்டும் தமிழ்நாடு திரும்பும் படக்குழுவினர் 26 ம் தேதி திருச்சியில் ரசிகர்களை சந்தித்த பின் சென்னையில் ஏப்ரல் 27 ம் தேதி அவர்களின் பயணத்தை முடிக்கின்றனர்.

இது தொடர்பாக அட்டகாசமான சிறப்பு காட்சிகளுடன் படக்குழு வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.