தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தொடர்ந்து அசத்தலான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்க, பத்து தல படத்தின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா தனது திரை பயணத்தில் முதல் படமாக இயக்கிய சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கிய KE.ஞானவேல் ராஜா அவர்கள் தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது முதல் படமாக இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடித்த பருத்திவீரன் திரைப்படத்தையும் தயாரித்தார். இதனைத் தொடர்ந்து சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, மெட்ராஸ், டார்லிங், கொம்பன், மாசு என்கிற மாசிலாமணி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி, டார்லிங் 2, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், கஜினிகாந்த், நோட்டா, தேவராட்டம், மகாமுனி, மிஸ்டர் லோக்கல், டெடி உள்ளிட்ட படங்களை KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்தார்.

அடுத்ததாக இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகும் சூர்யா42 படத்தை தயாரிக்கும் KE.ஞானவேல் ராஜா அவர்கள், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் KGF கதை களத்தை மையப்படுத்தி 1800 களின் காலகட்டத்தைக் கொண்ட பிரம்மாண்டமான பீரியட் படமாக தயாராகும் தங்கலான் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களுமே 3D தொழிநுட்பத்தில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடிக்க KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க பிரியா பவானி ஷங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் பத்து தல திரைப்படத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தனது செல்போன் வால்பேப்பரில் இயக்குனர் SS.ராஜமௌலி அவர்களுடன் இருக்கும் புகைப்படம் இருப்பதற்கான காரணம் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். “இன்று நாம் பேசக்கூடிய பட்ஜெட் எல்லா விஷயங்களுக்கும் ராஜமௌலி சார் தான் காரணம். இன்று பாம்பேவில் நான்கு மொழிகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன என தெரிய வந்ததே ராஜமௌலி அவர்களால் தான். ஓ அது தெலுங்கு என்றால் நீங்கள் தமிழா, கன்னடா இண்டஸ்ட்ரி என்று ஒன்று இருக்கிறதா இன்னும் மலையாளம் வேறு இருக்கிறதா? ஹிந்தி திரையுலகில் இருப்பவர்களுக்கே எல்லாமே மதராசிகள் என்பது போய் இப்போது நான்கு மொழிகள் பாம்பேவை ஆளுகின்றன. இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ராஜமௌலி அவர்கள் தான். அவர் நம்மை அங்கு கொண்டு போய் சேர்க்கவில்லை என்றால் ரொம்ப நாட்கள் ஆகி இருக்கும். எனக்கு ஏன் வால்பேப்பரில் அவர் இருக்கிறார் என்றால் இது இரண்டரை ஆண்டுகளாக இருக்கிறது. ஏதாவது சிறியதாக யோசித்தால் என்னை எச்சரிப்பது போல… பெரியதாக சிந்திக்க வேண்டும் என சொல்வது போல வைத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…