தென்னிந்திய நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வரும் சமந்தா. கதாநாயகி மையப்படுத்தி எடுக்கப்படும் படத்திலும் அதே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அட்டகாசமான நடிப்பின் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கும் சமந்தா நடிப்பில் பிரமாண்டமாக இதிகாச பின்னணியில் உருவாகி நேற்று ஏப்ரல் 14 வெளியான திரைப்படம் ‘சாகுந்தலம்’. குணா டீம் ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரிப்பில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தினை பிரபல திரைப்படமான ருத்ரமாதேவி படத்தின் இயக்குனர் குணசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சமந்தாவுடன் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாகுந்தலம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய தளபதி விஜய்யின் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் இப்படத்தினை வெளியிட்டுள்ளது.

மகாகவி காளிதாசர் எழுதிய புரானகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக கொண்டு சரித்திர கதையாக படமாக்கபட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழிநுட்பத்தில் இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக விடுமுறை தினத்தையொட்டி சாகுந்தலம் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மயக்கும் பொழுதே’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. மணிஷர்மா இசையில் பாடலாசிரியர் கபிலன் எழுதியுள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. சாகுந்தலம் படத்திற்கு வரும் வரவேற்புகளை பகிர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார் நடிகை சமந்தா.

சாகுந்தலம் திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா அவர்களுடன் இணைந்து ‘குஷி’ படத்திலும் பாலிவுட் இந்தி இணைய தொடரான சிட்டாடேல் தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.