தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நெடுன்தொடரான ‘நாதஸ்வரம்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சன்முகபிரியா. நாதஸ்வரம் போன்று கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் செய்த தம்பதியினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகழகான ரீல்ஸ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவது வழக்கம். கியூட்டான இவர்களது வீடியோக்களுக்கே தனி ரசிகர் இணையத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திருமணமான ஒரே ஆண்டில் இது போன்ற நிகழ்வு வருத்தத்தில் உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து நடிகை ஸ்ருதிக்கு ரசிகர்கள் தங்களது ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சிலர் அரவிந்த் சேகர் மரணம் குறித்து பல பொய்யான தகவல்களையும் தவறான செய்திகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி அரவிந்த் சேகர் பாடி பில்டர் என்றும் கடுமையான உடர்பயிற்சியினர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என அவரது மரணத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு காரணங்களை சொல்லி வந்தனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வதந்திக்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். “நிறைய பேர் நிறைய ஆறுதலான வார்த்தைகள் சொல்லி வருகிறீர்கள் அதற்கு ரொம்ப நன்றி. அவர் என் கூடவே இருக்கிறார். இந்த துயரமான நேரத்திலும் இது போன்ற வீடியோவை வெளியிடுவதற்கு முக்கிய காரணம், சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் என்ன நடந்தது என்று தெரியாமலே பல தவறுதலான தகவல்களை பரப்பி வருகின்றனர். உங்களுக்கு தேவைப்பட்டால் இப்போது நான் பேசுவதை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.. தெரியாத தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்தார்களை கஷ்டப் படுத்த வேண்டாம்

அரவிந்த் இறந்தது மாரடைப்பால் தான்., அவர் ஒரு பாடி பில்டர், ஜிம் பயிற்சியாளர், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது இறந்து விட்டார் என்று எதுவும் கிடையாது. அவர் ஒரு சிவில் இன்ஜினியர். அவருக்கு பிட்னஸில் ஆர்வம் உள்ளது. அவ்வளவு தான், அவருடைய மரணத்தில் இருந்து தற்போது நாங்கள் மீண்டு கொண்டு வருகிறோம். அதனால் சமூக வலைதள பக்கங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம். வீட்டில் அனைவரும் வயதானவர்கள் அதனால் புரிந்து கொண்டு நடங்கள்..” என்று நடிகை ஸ்ருதி குறிப்பிட்டிருந்தார். தற்போது நடிகை ஸ்ருதி அவர்கள் பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.