கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய, மனைவி யூடியூப் பார்த்து சதி திட்டம் தீட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 43 வயதான சுரேஷ் சர்மா - குசும் சர்மா தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே, குசும் சர்மாவுக்கு திருமணம் ஆவதற்கு முன்பே, அப்பகுதியைச் சேர்ந்த புரன் மஹாவர் என்பவருக்கும் தவறான பழக்கம் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, குசும் சர்மாவுக்கு - சுரேஷ் சர்மாவுடன் திருமணம் ஆன நிலையில், புரன் மஹாவர் உடன் கள்ளக் காதல் மீண்டும் தொடர்ந்துள்ளது.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கள்ளக் காதலர்கள் இருவராலும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கள்ளக் காதலர்கள் இருவரும் சேர்ந்து, சுரேஷ் சர்மாவை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர். அத்துடன், கணவனை கொலை செய்ய யோசித்த மனைவி குசும் சர்மா, யூடியூபில் நிறைய வீடியோக்கள் பார்த்து எப்படி கொலை செய்யலாம் என்று திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில், சுரேசுக்கு போன் செய்த புரன் மஹாவர், “உங்கள் மனைவி பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளை உங்களிடம் சொல்ல வேண்டும்” என்று கூறி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லியிருக்கிறார். அதை நம்பி சுரேஷ் சர்மாவும் அந்த இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, மனைவி குசும் மற்றும் அவரது கள்ளக் காதலன் இருவரும் சேர்ந்து, சுரேஷ் சர்மாவை அடித்துக் கொலை செய்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த காயங்களுடன், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, கணவரின் உடலை அப்பகுதியில் சாலையோரம் அவரது மனைவி வீசிவிட்டுச் சென்றுள்ளார். இது குறித்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த விசாரணையில், கள்ளக் காதலருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை, மனைவி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய, மனைவி யூடியூப் பார்த்து சதித் திட்டம் தீட்டிய சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.