கள்ளத்தொடர்பு விவகாரத்தால், கணவரின் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி மற்றும் மகனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் காணமலை கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான குமார் - 36 வயதுடைய மனைவி ராஜம்மாள் தம்பதிக்கு 15 வயதில் மாதவன், 10 வயதில் அரவிந்தன் என 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே, ராஜம்மாளுக்கு கணவர் குமாரின் அண்ணன் சேட்டு என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகப் பேசப்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த குமார், கடந்த 2017-ம் ஆண்டு அண்ணன் சேட்டுவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து, ராஜம்மாளுக்கு இன்னும் வேற சிலருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக குமாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால், மனைவி மீது சந்தேகம் அடைந்த குமார், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரம் அடைந்த ராஜம்மாள், தன்னுடைய மூத்த மகன் மாதவனுடன் சேர்ந்து, கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி, கடந்த 3 ஆம் தேதி இரவு குமார், குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ராஜம்மாள் தான் மறைத்து வைத்திருந்த விறகு கட்டையால் கணவரின் தலையில் பலமாகத் தாக்கி உள்ளார். இதில், மயங்கிய குமார், அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மனைவி ராஜம்மாளும், மகன் மாதவனும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக, குமாரின் உடலை, அப்பகுதியில் உள்ள ஒரு தரிசு நிலத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீடு திரும்பி உள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்குப் பதிவ செய்து போலீசார், உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிவில், குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால், குமாரின் குடும்பத்தினர் மீது சந்தேகமடைந்த போலீசார், குமாரின் மனைவி ராஜம்மாள், மகன் மாதவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், இருவரும் சேர்ந்து குமாரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதல் விவகாரத்தில், மனைவியே கணவனைக் கொலை செய்த சம்பவம், திருவண்ணாமலை பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.