இந்தியா முழுவதும் 170 மாவடங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிப்பு!
By Aruvi | Galatta | 12:40 PM
இந்தியா முழுவதும் 170 மாவடங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்கும் விதமாக, மத்திய அரசு 2 வது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஆனாலும், தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் 170 மாவடங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட, சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இரட்டிப்பாகும் இடங்கள், அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம் தேவை என்ற நோக்கிலும், வாரம் ஒரு முறை அதாவது, ஒவ்வொரு திங்கள் கிழமையன்றும் இந்த வகைப்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளில், தமிழகத்தில் 22 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழகம் இல்லாமல் நாடு முழுவதும் 148 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் 123 மாவட்டங்களை அதிக அளவிலான கொரோனா தொற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தலைநகர் டெல்லியின் 9 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகர்ப்புறம், ஐதராபாத், சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய மாவட்டங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதில், ஆக்ராவைத் தவிர்த்து, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 பெருநகரங்களிலும் தற்போது அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் அதிக அளவிலான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ள மாவட்டங்களில், 14 நாட்கள் எந்த புதிய கொரோனா தொற்று ஏற்படாவிட்டால், ஆரஞ்சு நிற மண்டலமாகவும், அடுத்த 14 நாட்களில் புதிதாகத் தொற்று ஏற்படாவிட்டால், பச்சை மண்டலமாகவும் மாற்றப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. அத்துடன், தற்போது அதிக பாதிப்புக்குள்ளான ஹாட்ஸ்பாட் மண்டலத்தில், அடுத்த 28 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால், அது பச்சை மண்டலத்துக்கு மாற்றப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், மிதமான பாதிப்புக்கு உள்ளான நான்ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் 207 ஆக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் வெள்ளை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்கள் அனைத்தும், பச்சை மண்டலமாக மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது.
இதனிடையே, இந்தியாவில் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.