மாஸ்க அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம்! தமிழக அரசு அதிரடி
By Aruvi | Galatta | 12:50 PM
மாஸ்க அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, மத்திய அரசு இன்று காலை வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளில், “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், நேற்று சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 உடனடி அபராதம் விதித்தும், சாலையில் காரணமின்றி சுற்றியவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், சென்னையில் வீடுகளிலிருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, சென்னையில் மாஸ்க அணியாமல், வீட்டை விட்டு சென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரப் பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
அதேபோல், மாஸ்க அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், 6 மாதங்களுக்கு அவர்களுடைய லைஸ்சென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும், சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது.
மேலும், சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக்கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.