உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாமனாரைக் காப்பாற்ற முயன்ற மருமகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கேந்திசம்பா கோட்டகம் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன், 26 வயது மனைவி லிசா மற்றும் அப்பா - அம்மாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், விவேகானந்தனின் அப்பா அசோகன், தனது வீட்டின் பின்புறம் உள்ள பழுதடைந்த மின் மோட்டாரை, சரிசெய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால், கூச்சலிட்டபடியே, அவர் நிலை தடுமாறிச் சரிந்து விழுந்துள்ளார்.

இதனிடையே, மாமனாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மருமகள் லிசா, கீழே விழுந்த மாமனாரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், லிசா தூக்கி வீசப்பட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், லிசா பலியானது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.