தீரன் படப் பாணியில் கொள்ளையடித்து கொலை செய்த கும்பல்!
By Arul Valan Arasu | Galatta | 12:56 PM
கிருஷ்ணகிரி அருகே தீரன் படப் பாணியில் மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஹள்ளி கிராமத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்தில், 60 வயதான சாக்கப்பன், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
தேங்காய் வியாபரம் பார்த்து வந்த இவர், அந்த ஊரில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். ஆனால், ஏலச்சீட்டில் ஏற்பட்ட பிரச்சனைத் தொடர்பாக கடந்த 6 மாதமாக இவர் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு சாக்கப்பன் மகன் வேணுகோபால், வீட்டிலிருந்து வேலை விசயமாக வெளியே சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் ஒன்று, நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அங்கு, சாக்கப்பாவை கத்தி முனையில் மிரட்டி, வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை எடுத்து வருமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு அவர் பணமும், நகையும் இல்லை என்று கூறவே, ஆத்திரமடைந்த மர்ம கும்பல், சாக்கப்பனை கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால், பயத்தில் சாக்கப்பனின் மனைவி கத்தி கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சாக்கப்பனை மீட்டு அவச அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து முகமூடி கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தீரன் படப் பாணியில் மர்ம கும்பல் கொள்ளையடித்து கொலை செய்ததுள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.