நாய் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 30 வயதான கந்தசாமி, மல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் கந்தசாமி நேற்று பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று, அவரை பார்த்து குலைத்துக்கொண்டே அவரை துரத்தியுள்ளது.

நாய் துரத்தியதில் பயந்துபோன கந்தசாமி, வேகமாக கொஞ்ச தூரம் ஓடியுள்ளார். ஆனாலும், நாய் ஆக்ரோஷமாக ஓடிவருவதைப் பார்த்துப் பயந்துபோன அவர், அங்குள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

சுமார் 30 ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் இருந்துள்ளது. ஆனால், கந்தசாமிக்கு நீச்சல் தெரியாது என்பதால், தண்ணீரில் தத்தளித்தபடியே, கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை. இதனால், சிறிது நேரத்திலேயே, அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நாய் துரத்தியதால் கிணற்றில் விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.