தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கியுள்ள நிலையில், ரயில் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சுமார் 68 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் ரயில்கள் இயங்கத் தொடங்கி உள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் இன்று முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், கோவையில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கும் செல்கின்றன.

இந்த 4 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், பயணிகள் தங்களது பயணங்கை திட்டமிடத் தொடங்கி உள்ளனர்.

மேலும், இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

அத்துடன், ரயில் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,

- ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ ரயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் தமிழக அரசிடம் ஆன் லைன் மூலம் தங்களது விவரங்களைப் பதிவு செய்து, இ பாஸ் பெற்று இருக்க வேண்டும்.

Train,

- ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் பயணிகள், ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.

- பயணிகள் அனைவரும் மருத்துவச் சோதனை செய்யப்பட்டு பின்னரே ரயில் நிலையம் உள்ளே அனுப்பப்படுவர்.

- கொரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

- பயணிகள் கண்டிப்பாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும்.

- பயணச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

- சென்று சேரும் ரயில் நிலையத்திலும் அரசு வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

- நோய்த் தொற்றைத் தவிர்க்கப் பயணிகள் வீட்டிலிருந்து உணவு கொண்டு வரலாம்.