குளித்தலை அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 13 வயது சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வில்லுக்காரன் பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கீதா, அங்குள்ள தேசிய மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இதனிடையே, காலையில் வழக்கம்போல் சிறுமி, இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த 3 பேர், சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளனர்.

சிறுமி, வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள், பல இடங்களில் தேடி உள்ளனர். அந்த பகுதியிலும் விசாரித்துள்ளனர்.

அப்போது, சிறுமியைச் சிலர், காரில் கடத்தி சென்றதாகக் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட சிறுமியை மீட்டனர். ஆனால், கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து, மீட்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், காதல் விவகாரத்தால் சிறுமி கடத்தப்பட்டாளா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, குளித்தலை அருகே மர்ம நபர்களால் 13 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவமும், அடுத்த 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டுள்ள சம்பவமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.